334
சங்க இலக்கியத்
காயாம்பூ இற்றை நாளில் காசாம்பூ என வழங்கப்படுகிறது. இதன் கருநீல நிறம் கண்ணுக்கிடும் அஞ்சனம் போன்றது. இதற்கு அஞ்சனி, காசை, வச்சி என்ற பெயர்களை நிகண்டுகள் சூட்டுகின்றன. சங்க இலக்கியத்தில் இதன் மற்றொரு பெயர் ‘பூவை’ என்பதாகும். பூவை என்னும் சொல், நாகணவாய்ப் புள்ளையும், காயாவையும் குறிக்கும். பறக்கும் இப்புள்ளினத்தினின்றும் பிரித்துக் காட்டுதற்கு இதனைப் ‘பறவாப் பூவை’ என்றார் கடுவன் இளவெயினனார்:
“பறவாப் பூவைப் பூவினாயே”-பரி. 3:73
இப்பூ முல்லை நிலத்தது; செந்நில வழியிற் பூக்கும். சிறுபான்மை குறிஞ்சியிலும் பூக்கும்; கார் காலப்பூ; காலையில் பூத்து, இரவில் உதிரும்; குற்றுச் செடியில் கொத்துக் கொத்தாகப் பூக்கும்; இதன் முனை அரும்பு கருமையானது. மலர்ந்தால், இப்பூ மயிற் கழுத்து போன்று பளபளக்கும் நீல நிறத்தது. வீழ்ந்து வாடினால், கருமையாக இருக்கும். மலர் மெல்லியது; மணமுள்ளது; காண்போர் உள்ளங் கவர்வது என்றெல்லாம் புலவர் பெருமக்கள் விதந்து கூறுவர்.
“அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழி
காயாஞ் செம்மல் தாஅய்.”-அகநா. 14 : 1-2
“காயாங் குன்றத்துக் கொன்றை போல”-நற். 371 : 1
“கமஞ்சூல்மா மழைக்கார் பயந்து இறுத்தென
மணிமருள் பூவை அணிமலர் இடைஇடை
செம்புற மூதாய் பரத்தலின்”-அகநா.134 : 3-5
“புல்லென் காயப் பூக்கெழு பெருஞ்சினை
மென்மயில் எருத்தின் தோன்றும்”-குறுந். 183 : 5-6
“கொல்லை இதைய குறும்பொறை மருங்கில்
கரிபரந்தன்ன காயாஞ் செம்மலொடு”-அகநா. 133 : 7-8
“மெல்லிணர்க் கொன்றையும்
மென்மலர் காயாவும்”-கலி. 103 : 1
“இது என்பூவைக்கு இனிய சொற்பூவை”-ஐங். 375 : 3
காயாம்பூ நீலநிறமானது. நீல மணி போன்றது. இது மணி என்னும் அடைமொழியுடன் கூறப்படுகின்றது.