பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

அனிச்சம்
லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே
(Lagerstroemia flos-reginae, Retz.)

‘ஒண்செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்’ (குறிஞ். 62) என்று வரும் கபிலரின் குறிஞ்சிப் பாட்டடியில் உள்ள, ‘அனிச்சம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் அனிச்சம்பூ என்று உரை கூறினார். கலித்தொகையும் அனிச்சத்தைக் குறிப்பிட்டுள்ளது (கலி. 911)

‘மோப்பக் குழையும் அனிச்சம்’ என்பது வள்ளுவர் வாக்கு (திருக்கு. 90). இவ்வியல்புடைய ‘அனிச்சம்’ செடியா? கொடியா? மரமா? எங்குள்ளது? என்ற வினாக்களுக்குத் தக்க விடையிறுக்க இயலவில்லை.

எனினும் அனிச்சம் என்ற பெயரில் சீலங்காவில், ‘பாரடேனியா’ தாவரத் தோட்டத்திலும், மலேசியாவில் ‘கோலாலம்பூர்’ தாவரத் தோட்டத்திலும் வளர்க்கப்படும் சிறு மரத்திற்கு லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே என்ற தாவரப் பெயர் சூட்டப் பெற்றுள்ளது. இச்சிறுமரம் புதர்ச் செடி போன்று காணப்படுகிறது. பங்களூர் ‘லால்பாக்’ தாவரத் தோட்டத்தில் வளர்க்கப்படுகிறது. இதற்கு ‘பிரைட் ஆப் இந்தியா’ (Pride of India) இந்தியப் பெருமித மலர் என்று பெயர். இதன் பூ மிக அழகானது. மென்மையானது. இளஞ்சிவப்பு நிறமான ஆறு அகவிதழ்களை உடையது. மகரந்த வட்டத்தில் பல மகரந்தங்கள் திரண்டு பூவின் நடுவில் மஞ்சள் நிறமாக இருக்கும். ஆனால், இப்பூவை மோந்தால் குழையும் இயல்பு இல்லை. இதுதான் ‘அனிச்சம்’ என்று துணிதற்கில்லையாயினும் இப்போதைக்கு இதனை அனிச்சம் எனக் கருதி இதன் தாவரவியல்புகளைப் பற்றிச் சிறிது கூறுவாம்.

சங்க இலக்கியப் பெயர் : அனிச்சம்
பிற்கால இலக்கியப் பெயர் : அனிச்சம்
உலக வழக்குப் பெயர் : தடலி
தாவரப் பெயர் : லாகர்ஸ்ரோமியா பிளாஸ்ரீஜினே
(Lagerstroemia flos-reginae, Retz.)