பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344

மஞ்சரி : இலைக்கோணத்தில் 1 முதல் 2 அடி நீளமான நுனி வளர் பூந்துணர். எனினும், கலப்பு மஞ்சரியாக வளர்ந்து விடும்.
மலர் : செந்நிறமானது. கவர்ச்சியானது. அழகானது. இளஞ்சிவப்பு நிறமானது. பூக்கள் உதிரும் போது, வெளுத்து விடும். இது இந்தியப் பூக்களில் சிறந்தது என்பர். இதற்கு இரு மலர்ச் செதில்கள் உள்ளன.
புல்லி வட்டம் : 6 புறவிதழ்கள் இணைந்து, புனல் வடிவானது.
அல்லி வட்டம் : 6 அகவிதழ்கள் உடையது. அகவிதழ்களுக்குச் சிறு காம்பு காணப்படும். இலையில் உள்ளது போன்று, நடு நரம்புப் பக்கத்தில் கிளை நரம்புகளும் உள்ளன. அகவிதழ் சற்று மடிந்து சுருங்கியிருக்கும். இதனால் இதனை மடிப்புப் பூவென்பது முண்டு. ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை பூக்கும்.
மகரந்த வட்டம் : பலப்பல மகரந்த இழைகள் திரண்டு, மலரின் நடுவில் மஞ்சள் நிறமாகத் தோன்றும். நீண்ட இழைகள், புல்லி வட்டத்தின் அடியிலிருந்து தோன்றும்.
சூலக வட்டம் : 3 முதல் 6 செல்களை உடையது. பல சூல்கள் அச்சு ஒட்டு முறையில் இணைந்துள்ளன. சூல்தண்டு நீண்டு வளைந்தது. சூல்முடி உருண்டை வடிவானது.
கனி : கனி முற்றியவுடன் 6 பகுதிகளாக வெடிக்கும். புறவிதழ் கனியின் அடியில் சுருங்கி ஒட்டிக் கொண்டிருக்கும்.
விதை : விதைகள் பழுப்பு நிறமானவை. சிறகு போன்று விரிந்திருக்கும். மெல்லிய வித்திலைகள், மடிந்து வட்டமாகத் தோன்றும்.