பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

சங்க இலக்கியத்


பீர்க்கம்பூ சிறியது; அழகானது; பொன் போன்ற மஞ்சள் நிறமானது. காதலனைப் பிரிந்த தலைவிக்கு உண்டாகும் நிற வேறுபாடு, ‘பசலை’ எனப்படும். ‘பசப்பு’ என்பதும் இதுவே. ‘பசலை’ பாய்ந்த மகளின் நிறம் பீர்க்கம் பூவை ஒத்து, மஞ்சள் நிறத் தேமலாகத் தோன்றும். இதனை நெற்றியில் காணலாம் என்பர்.

“பசுநிலா விரிந்த பல்கதிர் மதியின்
 பெருநல் ஆய்கவின் ஒரீஇ சிறுபீர்
 வீ ஏர் வண்ணம் கொண்டன்று
 . . . . . . . . . . . . சிறுநுதலே”
-அகநா. 57 : 11-13

“பொன்போல் பீரமொடு புதல்புதல் மலர”நெடுநல். 14

“பொன்என இவர் கொடிப் பீர்”-ஐங். 464

“தோளேதொடி நெகிழ்ந் தனவே நுதலே
 பீர்இவர் மலரில் பசப்பூர்ந் தனவே”
-நற். 197 : 1-2

நெற்றியிற் காணப்படும் பசலையைக் கண்ட ஊரார் அலர் உரைப்பர். அலர் உரைத்தலாலும், பசலை உண்டாகும்; நறுநுதல் வனப்பிழக்கும்; உடல் மெலியும்.

“ஊர்அலர் தூற்றலின் ஒளிஓடி நறுதுதல்
 பீர்அலர் அணிகொண்டு பிறை வனப்பு
 இழவாக்கால்”
-கலி. 53 : 14-15

பசலை படர்ந்த தலைவியின் உரையாடலை நற்றிணைப் பாடல் ஒன்று கூறுகின்றது.

பீர்க்கம்பூ பொன் நிறமானது. எனினும், மணமில்லாதது. மணத்தில் நாடி பார்க்கும் வல்லமை கொண்டது தும்பி என்பர். இதனைக் கடிந்து கொள்ளுகின்றாள் காதலனைப் பிரிந்த ஒருத்தி.

‘தும்பியே! நீ கொடியை! முள் வேலியிற் படர்ந்த பீர்க்கம் பூவை ஊதித் தேனைப் பருகினாய். எனினும் முகம் சுளித்தாய். அப்பூவில் மணமில்லாமையின் முகம் வேறுபட்டாய் போலும்! நீ ஒன்று செய்திருக்கலாம். என் உடம்பில் படர்ந்துள்ள பசலையை ஊதியிருக்கலாம். மணமாவது பெற்றிருப்பாய்! இருப்பினும் வாழி!’ என்று கூறுகிறாள்.