பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

363

இம்மரம் அரும்பற மலரும். தேன் சொரியப் பூக்கும். மணங்கமழப் பூக்கும். மலரில் சுரும்பினம் மொய்க்கும். மகளிர் மலரைக் கூந்தலிற் பெய்வர் என முன்னரும் கூறினோம்.

“அரும்புஅற மலர்ந்த ஆய்பூ மராஅத்துச்
 சுரும்புசூழ் அலரி தைஇ வேய்ந்தநின்
 தேம்பாய் கூந்தல்”
-அகநா. 257 : 6-8

“. . . .. . . . வலம்சுரி மரா அத்து
 வேனில் அஞ்சினை கமழும்”
-குறுந். 22 : 3-4

தீய்ந்த இம்மரத்தில் சுரத்திடை வேனிற்காலத்தில் பூக்கும் மலர்களில் தேனில்லாது போவதும் உண்டு என்றும், இதன் தேன் கருதி இம்மலரை ஊதிய தும்பி தேனின்றி ஏமாந்து பெயரும் என்றும் கூறுவர் காவல் முல்லைப்பூதனார்.

“தீய்ந்த மராஅத்து ஒங்கல் வெஞ்சினை
 வேனில் ஓர்இணர் தேனொடு ஊதி
 ஆராது பெயரும் தும்பி”
-குறுந். 211 : 4-6

வெண்கடம்ப மரத்தடியிலும் பலர் கூடும் மன்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மரத்தின் அடியிடத்தில் போரில் புறங்கொடாது மாய்ந்த வீரரது நடுகல் நாட்டப்படும். இம்மரத்தில் சிறுதெய்வம் இடம் பெறுவதாகவும், இத்தெய்வம் கொடியோரைத் தெறுமென்றும் நம்பினர்.

“மன்ற மராஅத்த கூகை குழறினும்”-அகநா. 158 : 13

“செல்லும் தேயத்துப் பெயர்மருங்கு அறிமார்
 கல்எறிந்து எழுதிய eகல்அரை மராஅத்த
 கடவுள் ஓங்கிய காடுஏசு கவலை”

-மலைபடு. 394-396

“மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
 கொடியோர்த் தெறு உம் என்ப”
-குறுந். 87 : 1-2

மராமரத்திற்கு இன்னும் ஒரு சிறப்பு காணப்படுகின்றது. இதனைச் சங்க இலக்கியங்கள், மராஅ. மராஅம். மராஅத்து என அளபெடையுடன் பெரிதும் குறிப்பிடுகின்றன. இஃது மராமரத்திற்கு ஒரு தனிச் சிறப்பு போலும்.