பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

365

மகரந்த வட்டம் : 5 குட்டையான தாதிழைகள் அகவிதழ்க் குழலின் தொண்டைப் பகுதியில் ஒட்டியிருக்கும். மகரந்தப் பைகள் நீள்முட்டை வடிவில் ஈட்டி போன்றிருக்கும்.
சூலக வட்டம் : 4 செல்களை உடையது. அடியில் இரு செல்களாக இணைந்து விடும். பல சூல்கள் படுக்கையானவை. இரு பிளவான சூலகக் காம்பில் இணைந்துள்ளன.
சூல் தண்டு : மெல்லியது. மலரின் வெளியே காணப்படும்.
சூல் முடி : வெண்ணிறமானது. இதுவே மலரின் வெண்மை நிறத்திற்குக் காரணம்.
கனி : மஞ்சள் நிறமான அடித்தளத்தில் வெடிகனியாகப் புதைந்திருக்கும். மேற்புறத்தில் 4 குல்லாய் போன்றும் அடிப்புறத்தில் மெலிந்தும் எளிதில் உடையக் கூடியதாகவும் இருக்கும்,
விதை : பல விதைகள், கோணங்களை உடையவை. விதை உறை ‘மூரிகுலேட்’ எனப்படும். கரு மிக நுண்ணியது வட்டவடிவான விதையிலைகளை உடையது. முளைவேர் தடித்திருக்கும்.

இம்மரம் மேற்குத் தொடர்ச்சி மலையில் 1500 அடி உயரமான மலைப் பாங்கிலும், மேற்குக் கடற்கரையிலும் வளர்கிறது. இலையுதிர் காடுகளிலும் காணலாம். இதன் அடிமரம் நேரானது. மரவேலைக்குப் பெரிதும் பயன்படுகிறது. இதனால் இது வளர்க்கப்படுகிறது. வெண்கடம்ப மரம் கட்டிட வேலைக்குப் பெரிதும் பயன்படுகிறது. மரம் வெளிர் மஞ்சள் நிறமானது.