பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சங்க இலக்கியத்

இனி, மதுரை மருதன் இளநாகனார் பாடிய ஒரு பாடலின் ஒரு கூறு சிந்திக்கற்பாலது. தலைவன், பரத்தையிற் பிரிந்து காலங்கழித்து புலந்து நிற்கும் தலைவியிடம் வருகின்றான். காமக்கிழத்தி, பாணர்குலப் பெண் விறலியை நோக்கிச் சொல்லுவாள் போலக் கூறித், தலைவியைப் புலவி தணிக்கின்றாள்:

“முள் போன்று கூரிய பற்களை உடையோய்! ஊரனது வயலில் ஆம்பலின் சூடு தரு புதிய பூ மலர்ந்தது. அதனைக் கன்றை ஈன்ற பசுவானது தின்றது. எஞ்சிய மிச்சிலை உழுது விட்ட, ஓய்ந்து போன பகடு தின்னா நிற்கும். அப்படிப்பட்ட ஊரனுடன் நெடுங்காலம் கூட்டம் நிகழ்த்துதலை நீ விரும்பினையாதலின் என் சொற்களைக் கேட்டல் நினக்கு விருப்பமோ? விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக் கொள்க. நீ இளமைச் செவ்வியெல்லாம் நுகர்ந்து புதல்வர்ப் பயந்த பின்னர் உழுது விடுபகடு, எச்சிலை அயின்றாற்போலப் பிறர் அவனை நுகர்ந்தமை, நினக்கு இழுக்கன்று. “அவள் அவனோடு கட்டில் வரை எய்தியிருக்கிறாள்” என்று ஊரார் கூறுகின்ற சொல்லை நீ என்னைப் போல வேறு பட்டுக் கொள்ளாதே. அங்ஙனம் கொள்வது நின் இளமைக்கும் எழிலுக்கும் ஏலாது. அவனை ஊரார் நடுயாமத்து விரியும் பூவில், தேனுண்ணுகின்ற வண்டென்பதன்றி, ஆண்மகன் என்னார். ஆதலின் புலவாதே கொள்” என்று நயந்து கூறியது. (நற். 290)

“வயல் வெள்ளாம்பல் சூடுதரு புதுப்பூக்
 கன்றுடைப் புனிற்றுஆ தின்ற மிச்சில்
 ஓய்விடு நடைப்பகடு ஆரும் ஊரன்”
-நற். 290: 1-3

என்னும் இப்பாடற் பகுதியில் ஒரு பெரிய தாவரவியல் உண்மை பதிந்து உள்ளது போலத் தோன்றுகிறது. அரும்புகள், போது அவிழ்ந்து மலருங்கால் சிறிது சூடு உண்டாகும். இவ்வெப்பத்தால் அரும்புகள் மலரும். அரும்புகள் மலர்வதற்குச் சிறிது சக்தி (Energy) பிறக்க வேண்டும். இச்சக்தி வெப்பமாக வெளிப்படும். அரும்பிலும், போதிலும், சேமித்து வைக்கப்பட்டுள்ள ATP எனும் ஒரு வகை சக்திக் கூடு உடைந்து ஆற்றலாகும். ATP என்பது நுண்ணிய சேமிப்புச் சக்தியின் முடிச்சு அரும்பு மலருங்கால் ஒரு வகையான ஊக்கி (Hormone) அதன் செல்களில் (Cells) சுரக்கும். அப்போது சக்தியின் முடிச்சு அவிழ்ந்து சக்தி வெப்பமாக மாறி வெளிப்படும். இச்சக்தியைக் கொண்டு அரும்பு போதாகி மலரத் தொடங்கும். இதனையே ஒருவேளை ‘சூடுதரு புதுப்பூ’ என்று மருதன் இளநாகனார் கூறினார் போலும்!