பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386

சங்க இலக்கியத்

ஐங்குறுநூற்றில் (308)

“விரியிணர்க் கால்எறுழ் ஒள்வீதாஅய”

என்று ஓதலாந்தையர் இதனைக் கூறுவர். இதனால் எறுழம்பூ காம்புடையதென்றும், கொத்தாகப் பூக்குமென்றும், விரிந்த இதன் மலர் ஒள்ளியதென்றும் அறியலாம்.

இவையன்றி. சைலியா டோலாரிமிபார்மிஸ் (Xylia dolarimiformis) என்னும் இலையுதிர் மரத்தை ‘எருள்’ (Erul) என்று லஷிங்டனும், இருள் (Irul) என்று காம்பிளும் கூறுப. இதன் பூக்கள் வெண்மை நிறத்தவை. ஆதலின். இது எறுழமன்று. உயரமான பெரிய மலைப் புறத்தே நெருப்பை ஒத்த செந்நிறப் பூக்களைக் கொத்துக் கொத்தாக உமிழும் ஓர் அழகிய மரமுண்டு. நீலகிரி மலையில் தொட்டபெட்டா என்னும் மலையுச்சிக்குப் போகும் பாதையில் ரோடோடென்ட்ரான் என்று ஒரு சிறு மரம் காணப்படுகிறது. இதனை ரோடோடென்ட்ரான் நீலகிரிகம் (Rhododendron nilagiricum)என்பர் காம்பிள் (Gamble) . இதனை அழிஞ்சில் என வழங்குவர் என்று தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளார். அழிஞ்சில் மரம் இதனினும் முற்றிலும் மாறுபட்டது.

சங்க இலக்கியக் குறிப்புக்களைக் கொண்டு பார்த்தால், எறுழம் என்பது ரோடோடென்ட்ரான் நீலகிரிகம் என்னும் மரமாக இருக்கலாம் என்று தமிழறிஞரும் தாவர விற்பன்னரும் கூறுவர். இதற்குக் காரணம், கபிலர் இதனை ‘நெருப்பை ஒத்த எறுழம்’ என்று குறிப்பிடுதலின் என்க.

எறுழம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : ஹெடீரோமீரி (Heteromerae)
தாவரக் குடும்பம் : எரிகேசி (Ericaceae)
தாவரப் பேரினப் பெயர் : ரோடோடென்ட்ரான் (Rhododendron)
தாவரச் சிற்றினப் பெயர் : நீலகிரிகம் (nilagiricum)
தாவர இயல்பு : சிறு மரம் 4 முதல் 5 மீட்டர் உயரமாக வளரும்.