பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

சங்க இலக்கியத்

கொண்டு முல்லை இசையோடும் பொருந்தி, முல்லைப் பண்ணாகவும் வழங்கப்பட்டமை அறியலாம்.

இத்துணைச் சிறப்பிற்றாகிய முல்லை ஒரு படர் கொடியாகும். முல்லைக் கொடி கார் காலத்தில் வளமாக ஓங்கி வளர்ந்து, தேரூரும் நெடுஞ்சாலையில் ஓரமாகத் தாவி நிற்கிறது. அவ்வழியில், கடை ஏழு வள்ளல்களில் ஒருவராகிய பாரி வள்ளல் தேர் ஊர்ந்து வருகிறார். முல்லைக் கொடி கொழு கொம்பின்றி அவர் இவர்ந்து வந்த தேரின் மேல் உராய்ந்தது. அது கண்ட பாரி தமது தேரை நிறுத்தி, முல்லைக் கொடியைக் கூர்ந்து நோக்கினார். பற்றுக் கோடின்றித் தளர்ந்து தாவி நின்ற முல்லைக் கொடியின் பால் இரக்கம் கொண்டார். முல்லைக் கொடி தேரின் மேலேறிப் படரும் பொருட்டுத் தேரை, அவ்விடத்தே நிறுத்தி விட்டு நடந்து சென்றார். ஓரறிவுயிராகிய முல்லைக் கொடியினிடத்தே காட்டிய பாரியின் பரிவு புலவர் உள்ளத்தைத் தொட்டது.

“. . . . . . . . . . . . சுரும்பு உண
 நறுவீ உறைக்கும் நாகநெடு வழிச்
 சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
 பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
 பறம்பின் கோமான் பாரியும். . . . ”
-சிறுபா. 87-91

என்று நத்தத்தனாரும்,

“ஊருடன் இரவலர்க்கு அருளி தேருடன்
 முல்லைக்கு ஈத்த செல்லா நல்இசை
 படுமணி யானைப் பறம்பின் கோமான்
 நெடுமாப் பாரி. . . . . . . .”
-புறநா. 201 : 2-5

என்று கபிலரும் பாடுவாராயினர்.

இனி, ‘புனைகொடி முல்லை’ (புறநா. 200 : 9) எனவும். ‘பைங்கொடி முல்லை’ (அகநா. 74) எனவும், ‘நெடுங்கொடி முல்லை’ (ஐங். 422) எனவும் கூறப்படுதலின், முல்லை ஒரு பசிய நீண்ட கொடி எனவும், ‘பாசிலை முல்லை’ (குறுந். 108) (புறநா. 117 : 9) எனப்படுதலின், முல்லைக் கொடி பசுமையானதென்னும் இதன் தாவர இயல்பு கூறப்படுதல் காண்க.

இது பற்றுக் கொம்பில்லாதவிடத்துக் குன்றில் கருங்கல்லின் மேலேறிப் படரும் இதன் இயல்பைக் ‘கல்லிவர் முல்லை’ (குறிஞ். 77) ‘முல்லை ஊர்ந்த கல் இவர்பு ஏறி’ (குறுந். 275) என வரும் அடிகளில் காணலாம்.