பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

சங்க இலக்கியத்

“தண்கமழ் முல்லை தோன்றி யொடு
 வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன்”

-அகநா. 94 : 6-7


மேலும், மஞ்சள் நிறமுள்ள ஞாழல் மலரையும், செந்நிறமான செங்குவளை மலரையும், வெண்மையான முல்லை மலருடன் புனைந்த கண்ணி பற்றிய செய்தியையும் அகநானூற்றில் காணலாம்.

“கடலாடு மகளிர் கொய்த ஞாழலும்
 கழனி உழவர் குற்ற குவளையும்
 கடிமிளைப் புறவின் பூத்த முல்லையோடு
 பல்லிளங் கோசர் கண்ணி அயரும்”
-அகநா. 216 : 8-11

முல்லை முகை, “மகளிரின் முத்தன்ன வெண் நகை” (பல்) யை ஒக்கும் எனப் புலவர் பெருமக்கள் பாடுவர்.

(பரி. பா. 8 : 6;: நெடுநல். 130; குறுந். 186;: புறநா. 117 : 8-9; கலி. 103 : 6; 108:15)

குளிர்ந்த கார் காலம் முல்லை முகைகளையொத்த தனது பற்களைக் காட்டி நகை செய்வதாகத் தலைவி கூறும் ஒரு குறுந் தொகைப் பாட்டு.

“இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
 இவனும் வாரார் எவணரோ என
 பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
 தொகுமுகை இலங்கு எயிறாக
 நகுமே தோழி நறுந்தண் காரே”
-குறுந். 126

(புறந்தந்த-பாதுகாக்கப்பட்ட, எயிறு-பல்)

முல்லைக் கொடி தனது சிறு வெள்ளிய அரும்பையொத்த பற்களைக் காட்டி நகுவது போல முறுவல் கொண்டது என வினை முற்றி மீளும் தலைவன் கூறுவதாக உள்ள குறுந்தொகைப் பாடல்.

“கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப்
 பல்ஆ புகுதரூஉம் புல்லென் மாலை
 முல்லை வாழியோ முல்லை நீநின்
 சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
 நகுவை போலக் காட்டல்
 தகுமோ மற்றுஇது தமியோர் மாட்டே”
-குறுந் . 162