பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

சங்க இலக்கியத்

எனவும் (நச்) சாதிமுல்லை எனவும் கூறப்படுகின்றன. பிற்கால இலக்கியத்தில் காணப்படும் ‘தவளம்’ என்பதை வெண்ணிற முல்லை என்பர். மேலும் கொடி முல்லை. ஊசி முல்லை என்பன வழக்கில் உள்ளன.

முல்லையைச் சேர்ந்த மல்லிகைச் செடியும், ஜாஸ்மினம் என்ற பேரினத்தையே சேர்ந்ததாகும். சங்கவிலக்கியத்தில் பரிபாடலில் மட்டும் மல்லிகை மலர் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சியில் இறுதி வெண்பாவில் மல்லிகை கூறப்படுகிறது. அன்றி, குறிஞ்சிப் பாட்டிலும், பிற சங்கப் பாடல்களிலும் குளவி என்ற மலர்ப்பெயர் காணப்படுகின்றது. இதனை நச்சினார்க்கினியர் ‘காட்டு மல்லிகை’ என்று கூறுவர். இதற்குத் தாளிப்பூ என்று பரிபாடல் பழைய உரை கூறும். ஐந்து முதல் எட்டு அடுக்கு அகவிதழ்களைக் கொண்ட மிக மணமுள்ள அடுக்கு மல்லிகைச் செடியும் இதில் உண்டு. குறிஞ்சிப் பாட்டில் காணப்படும் அதிரல் என்பதற்குப் ‘புனலிப்பூ’ என நச்சினார்க்கினியரும், ‘காட்டு மல்லிகை’யெனச் சிலப்பதிகார அரும்பத உரை ஆசிரியரும் கூறுப.

மற்று, ஓலியேசி என்ற இத்தாவரக் குடும்பத்தில் நிக்டாந்தெஸ் (Nyctanthes) என்ற பேரினமும் உண்டு. இப்பேரினத்தைச் சார்ந்த பவழமல்லிகையை நிக்டாங்தெஸ் ஆர்பார்டிரிஸ்டிஸ் என்பர். இது பவழக்கால் மல்லிகை எனவும் பாரிசாதம் எனவும் வழங்கும். சங்க இலக்கியத்தில் இது ‘சேடல்’ என்று பேசப்படுகின்றது. மேலும், இக்குடும்பத்தில் மிராபிலிஸ் என்ற மற்றொரு பேரினமும் உண்டு. மாலையில் மலரும் பல்வேறு வண்ண மலர்களுடைய அந்தி மல்லிகை, மிராபிலிஸ் ஜலாபா எனப்படும்.

மரமல்லிகை எனப்படும் நறிய மலர் குலுங்கும் மரம், மில்லிங் டோனியா ஹார்டென்சிஸ் எனப்படும். இது பிக்னோனியேசி என்ற தாவரவியல் குடும்பத்தைச் சார்ந்தது. ‘நாகமல்லிகை’ என்ற குறுஞ்செடி வெள்ளிய நறிய மலர்களையுடையது. இதற்கு ரைனகாந்தஸ் கம்யூனிஸ் மான்டானா (Rhinacanthus ccommunis var. montana) என்று பெயர். இதன் மலரியல்புக்கு ஏற்ப இது அக்காந்தேசி (Acanthaceae) என்ற குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆகவே முல்லை, மல்லிகைகளைப் பட்டியலிட்டுக் காண்போம்.