பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

436

பித்திகம், கொடியில் மலர்ந்தாலும், அரும்பாகக் கொய்து வைக்கப்பட்டு மலர்ந்தாலும், அந்திப் பொழுதிலேயே மலரும் இயல்புடையது. இவ்வியல்பினை உணர்ந்திருந்தனர் தமிழ்க்குடி மக்கள். இதனை விளக்குமாறு போல, நெடுநல் வாடையில் அந்தி மாலைச் சிறப்புச் செய்தியொன்று காணப்படுகின்றது.

பொழுது சாய்கிறது; கார் காலமாதலின், கதிரொளியில்லை. அந்திப் பொழுது வந்தவாறும் அறிதற்கில்லை. பசுங்காற் பித்திக அரும்புகளைப் பூந்தட்டிலே இட்டு வைத்திருந்தனர். அந்திப் போது இதுவென்றறிவிக்குமாறு போல, பித்திகப் போதெல்லாம் மலர்கின்றன. அவை விரிந்து, அலரும் செவ்வி மணக்கின்றது. மகளிர் அந்திக் காலம் வந்தது என்றறிந்தனர். இரும்புத் தகளியில் நெய் தோய்ந்த திரியைக் கொளுத்துகின்றனர். நெல்லையும், மலரையும் சிதறி, இல்லுறை தெய்வத்தை வணங்கினர். இவ்வளப்பத்தை மாலைக் காலத்தே அங்காடித் தெருவெல்லாம் கொண்டாடிற்று.

“மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
 செவ்வி அரும்பின் பைங்காற் பித்திகத்து
 அவ்விதழ் அவிழ்பதம் கமழ்பொழுது அறிந்து
 இரும்பு செய்விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
 நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது
 மல்லல் ஆவணம் மாலை அயர”
-நெடுநல். 39-44
(பிடகை-பூந்தட்டு)

‘பித்திகை மலர்களைக் குருக்கத்தி மலர்களுடன் விரவி, உழவர் தனி மகள் மலர் விற்பள்’ என நற்றிணை கூறும்.

“துய்த்தலை இதழ் பைங்குருக் கத்தியொடு
 பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோஎன
 வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
 தண்டலை உழவர் தனிமட மகளே”
-நற். 97 : 6-9

இனி, தளவ மலரைச் செம்முல்லை என்று புலவர்கள் கூறுவராயினும், உலக வழக்கில் தளவத்தைப் பிச்சிப்பூ என்று கூறலால், தளவம் பற்றிய சில குறிப்புகளையும் இத்தாவரத்துடன் நோக்குவது ஒக்கும்.