பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

453

தாவரவியலில் இவையனைத்தும் ஜாஸ்மினம் என்ற முல்லை இனத்தைச் சார்ந்தவையாகும். நிகண்டுகளில் பிங்கலமும், சூடாமணியும், மல்லிகையை, முல்லையினின்றும் வேறு பிரித்துக் கூறுகின்றன.

மல்லிகை மலர் சிறந்த மணம் தருவது. முல்லைப் பூவைக் காட்டிலும், சற்றுப் பருத்தது. தூய வெண்மையானது. மிக மென்மையானது.

மல்லிகை சிறு புதராக வளரும். நீண்ட கொடியாக வளரும் மல்லிகையும் உண்டு. மனைத் தோட்டங்களில் வளர்க்கப்படுவதோடு, மலருக்காகப் பெரும் பண்ணைத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலரிலிருந்து விலை உயர்ந்த மல்லிகைத் தைலம் எனப்படும் (Jasmin oil) ஒரு வகை நறுமண எண்ணெய் எடுக்கப்படுகிறது. சிறந்த நறுமணமுள்ள இந்த எண்ணெய் பல்வேறு தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

மல்லிகை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி (Oleaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச் சிற்றினப் பெயர் : புயபெசன்ஸ் (pubescens)
தாவர இயல்பு : பல்லாண்டு வாழும். புதர்க் கொடியாகவும், புதர்ச் செடியாகவும் வளரும்.
தாவர வளரியல்பு : மீசோபைட்
உயரம் அல்லது நீளம் : 1-1.5 மீட்டர் உயரமுள்ள அடர்ந்த புதர்.