பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

469

“முதிரா வேனில் எதிரிய அதிரல் ”-நற். 337 : 2

மேலும் இது இரவில் மலரும் என்று குமரனார் கூறுவர்.

“எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல் ”-அகநா. 157 : 6

அதிலும் அணைந்த விளக்குகளை கைத்திரி கொண்டு தீக்கொளுவும் இரவில் யானை, குதிரை முதலியவற்றின் கழுத்தில் கட்டிய நெடிய நாக்குடைய ஒள்ளிய மணி ஒலி அடங்கிய நடுயாமத்தில் அதிரல் பூத்தது என்று கூறும் முல்லைப்பாட்டு.

“கையமை விளக்கம் நந்துதொறும் மாட்ட
 நெடுநா ஒண்மணி நிகழ்த்திய நடுநாள்
 அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்”
-முல்லைப். 49-51

இனி, அதிரல் என்பது மோசிமல்லிகை என்றார் சிலப்பதிகார அரும்பத உரையாளர். மோசி என்பது திரண்டு கூர்மையுடையது எனப் பொருள்படும். இதன் அரும்பு, குயிலின் வாயைப் போல நுனி கூர்மையானது என்றும், காட்டுப் பூனையின் பற்களைப் போன்று வெள்ளியது என்றும் கூறப்படுகிறது.

“குயில்வா யன்ன கூர்முகை அதிரல்”-புறநா. 269 : 1
“பார்வல் வெருகின் கூர்எயிற் றன்ன
 வரிமென் முகைய நுண்கொடி அதிரல்;”
-அகநா. 391 : 1-2

அதிரல் மலர் நறுமணம் உடையது. பாதிரி, செங்கருங்காலி மலர்களுடன் இணைத்துப் பேசப்படுகின்றது. ஒரு தோழி, பொருள்வயின் பிரியும் தலைவனிடம்,

‘தலைவனே! நீ பொருளீட்டச் செல்வதால், உனக்கு ஊதியமே. ஆனால், அதில் ஓர் இழப்பு நேர்வதை மறந்தனையோ? அது ஓர் அரும்பெறல் பெரும்பயன், நினது தலைவியின் கூந்தலில் வெளிப்படும் ஒரு நன்மணம் அதிரல் பூவையும், பாதிரி மலரையும், செங்கருங்காலிப் பூவையும் இட்டு மூடி வைத்திருந்த பூஞ்செப்பைத் திறந்தவுடன் வெளிப்படும் சிறந்த நறுமணம். இம்மணத்தை நுகராது இழக்கின்றாய்!’ என்று கூறுகின்றாள். (நற். 337)

மேலும், மகளிர் பாதிரி மலரை அதிரலோடு விரவிக் கட்டிக் கூந்தலில் அணிவர். (அகநா. 261 : 1-3) என்றும், இம்மலர்கள் ஒரேயிடத்தில் உதிர்ந்து கிடக்கும் (அகநா. 99 : 6-7) என்றும் கூறுப்படுகின்றது.