பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

சங்க இலக்கியத்

முருகன் உறையும் குன்றுகளின் உள்ள சுனையைக் கடவுட்சுனை என்பர். அச்சுனையிற் பூக்கும் பூக்களை மாந்தர் சூடுவதற்குப் பறிக்காது விடுப்பர். அவற்றைச் சூர் அர மகளிர் கொய்து மாலையாக்கி முருகனுக்கு அணிவிப்பர். இக்குவளை மலர் முருகனுக்கு விருப்பமானது. ‘அதனை அறியாது தொட்டால் நடுங்கு துயர் உண்டாகும்’ என்று மலைபடுகடாம் (189-191) உரை கூறுகின்றது. அதனால், இதனைப் பறியாக் குவளை என்பர்.

மேலும், குவளையைப் பூவாக் குவளை என்று கூறுவதையுங் காணலாம். பரிசிலர்க்கு வழங்கப்படும் பரிசில்களில் விருதுடன் வழங்கப்படுவது பொன்னாற் செய்யப்பட்ட பூக்கள். இப்பொன்னுருவில் குவளை மலரும் இடம் பெற்றது. இவ்வாறு குவளை மலரின் உருவிற் செய்யப்படுவது பூவாக் குவளை என்பதாகும்.

“பனிநீர்ப் பூவா மணமிடை குவளை
 வால்நார்த் தொடுத்த கண்ணியுங் கலனும்”

-புறநா. 153: 7–8

மேலும், இக்குவளை மலரின் வடிவம் கட்டடங்களிலும், சிற்பங்களிலும் வடிக்கப்படும். பெரும் வளமனைகளிலும், அரண்மனைகளிலும் இரட்டைக் கதவுகளின் பிடியாக இவ்வடிவம் செய்யப்பட்டதை நெடுநல்வாடை கூறுகின்றது . அதிலும் புதிதாக மலர்ந்த குவளை மலரின் தோற்றத்தில் வடிக்கப்படுமென்பர்.

“நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து
 போதுஅவிழ் குவளைப் பிடியால் அமைத்து”

-நெடுநல்வாடை: 82-83
செங்குவளை மலர் மிக அழகானது. மணமுள்ளது செவ்வல்லி மலரைப் போன்றது. ஆனால், சற்றுக் கருஞ்சிவப்பாக இருக்கும். இதன் அகவிதழ்கள் செவ்வல்லியின் அகவிதழ்களைக் காட்டிலும் நீளத்திற் குறைந்தவை. இதனை மகளிர் சூடிக் கொள்வர்.

குவளை மலரின் மணத்தைத் தலைவியின் கூந்தல் கொண்டிருக்கும்.

“குவளை நாறுங் குவையிருங் கூந்தல்”-குறுந் : 300

“பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்
 திறந்து மோந்தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக்
 கொண்டல் மலர்ப்புதல் மானப் பூவேய்ந்து”

-மதுரைக் : 566-568