பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

இல்லம்–தேற்றா
ஸ்டிரிக்னஸ் பொட்டடோரம் (Strychnos potatorum.,L.f.)

சங்க இலக்கியத்தில் கூறப்படும் ‘இல்லம்’ என்பது தேற்றாங்கொட்டை மரம். இதன் பூக்களைப் பிற மலர்களுடன் சேர்த்துக் கண்ணியாகத் தொடுத்து, முல்லை நிலத்தவர் அணிவர். இம்மரம் கார்காலத்தில் பூக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : இல்லம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : தேறு, தேற்றா, தேறுவீ
உலக வழக்குப் பெயர் : தேற்றாங்கொட்டை மரம்
தாவரப் பெயர் : ஸ்டிரிக்னஸ் பொட்டடோரம்
(Strychnos potatorum.,L.f.)

இல்லம்-தேற்றாங்கொட்டை மரம் இலக்கியம்

இல்லம் என்பது தேற்றாங்கொட்டை மரம். கலங்கல் நீரைத் தேற்றித் தெளிவிக்க இதன் கொட்டையை நீரில் தேய்ப்பர். தேற்றப் பயன்படும் இதன் கொட்டையைத் தேற்றாங்கொட்டை என்றனர் போலும். பின்வரும் கலித்தொகைப் பாடலில்:

“கலம்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
 கலங்கிய நீர்போல் தெளிந்துநலம் பெற்றாள்

(காழ்-கொட்டை) -கலி. 142 : 64-65

முடத்தாமக் கண்ணியார், ‘நகுமுல்லை உகுதேறுவீ’ (பொரு. 200) என்பார். இதற்கு நச்சினார்க்கினியர் ‘அலர்கின்ற முல்லையினையும், பூ உகுகின்ற தேற்றா வினையும்’ என்று உரை கூறுவர்.