இல்லம்–தேற்றா
ஸ்டிரிக்னஸ் பொட்டடோரம் (Strychnos potatorum.,L.f.)
சங்க இலக்கியத்தில் கூறப்படும் ‘இல்லம்’ என்பது தேற்றாங்கொட்டை மரம். இதன் பூக்களைப் பிற மலர்களுடன் சேர்த்துக் கண்ணியாகத் தொடுத்து, முல்லை நிலத்தவர் அணிவர். இம்மரம் கார்காலத்தில் பூக்கும்.
சங்க இலக்கியப் பெயர் | : | இல்லம் |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் | : | தேறு, தேற்றா, தேறுவீ |
உலக வழக்குப் பெயர் | : | தேற்றாங்கொட்டை மரம் |
தாவரப் பெயர் | : | ஸ்டிரிக்னஸ் பொட்டடோரம் (Strychnos potatorum.,L.f.) |
இல்லம்-தேற்றாங்கொட்டை மரம் இலக்கியம்
இல்லம் என்பது தேற்றாங்கொட்டை மரம். கலங்கல் நீரைத் தேற்றித் தெளிவிக்க இதன் கொட்டையை நீரில் தேய்ப்பர். தேற்றப் பயன்படும் இதன் கொட்டையைத் தேற்றாங்கொட்டை என்றனர் போலும். பின்வரும் கலித்தொகைப் பாடலில்:
“கலம்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
கலங்கிய நீர்போல் தெளிந்துநலம் பெற்றாள்”
(காழ்-கொட்டை)
-கலி. 142 : 64-65
முடத்தாமக் கண்ணியார், ‘நகுமுல்லை உகுதேறுவீ’ (பொரு. 200) என்பார். இதற்கு நச்சினார்க்கினியர் ‘அலர்கின்ற முல்லையினையும், பூ உகுகின்ற தேற்றா வினையும்’ என்று உரை கூறுவர்.