எண்–எள்
செசேமம் இன்டிகம் (Sesamum indicum,Linn.)
மலைபடுகடாத்திலும், இலக்கண நூல்களிலும், ‘எள்’, ‘எண்’ எனக் கூறப்படும். எள்ளுச் செடியில் உண்டாகும் விதைக்கு ‘எள்’ என்று பெயர். இதில் ‘நெய்’ சேமிக்கப்பட்டிருக்கும். எள்ளின் நெய்தான் எண்ணெய் எனப்பட்டது.
சங்க இலக்கியப் பெயர் | : | எண் |
உலக வழக்குப் பெயர் | : | எள், எள்ளுச்செடி |
தாவரப் பெயர் | : | செசேமம் இன்டிகம் (Sesamum indicum,Linn.) |
எண்–எள் இலக்கியம்
பெருங்கௌசிகனார் எள்ளை, ‘எண்’ என்று குறிப்பிடுகின்றார். ‘எள்’ ஒரு சிறு வித்தாகும். நெய்ப் பிடிப்புள்ளது. எள்ளின் நெய்தான் எண்ணெய் எனப்பட்டது. மிகச் சிறிய அளவைக் குறிக்கும் போது - எள்துணை - எட்டுணை என்று கூறுவர். திருவள்ளுவர், எள்ளின் பிளவைச் சிறிய அளவாக்கிக் கூறுவர்[1]. இஃது ஒரு சிறிய செடியாகும். இச்செடியில் விழும் நோய்க்கு ‘மகுளி’ என்று பெயர் கூறுகிறார் கௌசிகனார். ‘மகுளி பாயாது’ என்பதற்கு ‘அரக்குப் பாயாமல்’ என்று உரை கூறுவார் நச்சினார்க்கினியர். எள்ளின் செடி பலவாகக் கிளைத்து வளரும் என்றும், இதன் இளங்காயைக் ‘கவ்வை-கௌவை’ என்றும், ஒரு கைப்பிடிக்கு ஏழு காய்கள் விளையுமென்றும், இளங்காய்கள் முற்றியவுடன் நெய்யை உள்ளே கொண்டு கருநிறமாக மாறுமென்றும், கொல்லையின் பக்கத்தில் எள்ளை விளைவிப்பர் என்றும் அவர் கூறுகின்றார்.
- ↑ “எட்பகவன்ன சிறுமைத்தே ஆயினும்”
-திருக்குறள். 889 : 1