பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

556

(1929), சுகியூரா ( 1931 ) (1936 பி) நொகாரா (1934) கோபாயாஷி (1956) என்போரும் கணக்கிட்டுள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தாவரத் துறையில் பல ஆண்டுகட்கு முன்னர் (1945) எள்ளுச் செடியில் நல்லதொரு ஆய்வு செய்தனர் பேராசிரியர் டி. எஸ். இராகவனும், கே. வி. கிருஷ்ணமூர்த்தியும். எள்ளைப் போன்றதொரு காட்டு எள்ளை விளைவிக்கும் காட்டு எள் செடி ஒன்று கடலோரப் பகுதிகளில் வளர்கிறது. அதற்குச் செசேமம் பிராஸ்ட்ரேட்டம் என்று பெயர். இச்செடி பல கிளைகளை நீளமாக விட்டு, நிலத்தில் படர்ந்து வளரும். எவ்வித வெப்பத்தையும், எத்துணை மழையையும் தாங்கும் இயல்பிற்று. இதற்கு நிலத்திலும் அதிகமான சத்து இருக்க வேண்டுமென்பதில்லை. ஆண்டிற்குக் குறைந்தது இரண்டு முறை பூத்துக் காய்க்கும். காய்களும் மலிய உண்டாகும். இதன் வித்தில் எண்ணெய் மிகக் குறைவுதான். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 32.

எள்ளின் செடியோ அங்ஙனமன்று. இதற்கு வெப்பமும், நீரும் அளவாகத்தான் இருக்க வேண்டும். ஒரு முறைதான் பூத்துக் காய்க்கும். காய்களும் ஒரு கைப்பிடிக்கு ஏழு காய்களாக விளையும். இவையிரண்டையும், செல்லியல் பரம்பரைக் கலப்பு முறையில் இணைத்து, புதியதொரு எள்ளுச் செடி உண்டாக்கினால், காட்டு எள்ளின் பண்புகள் இதில் ஏறும் என எண்ணி, இச்செடி உருவாக்கப்பட்டது. இதனுடைய குரோமோசோம் எண்ணிக்கை 2n = 29 ஆகி விட்டது. இந்த எண் ஒற்றைப் படையாகி விட்டபடியால், இதன் விதை முளைத்தாலும் பூக்காது. பூத்தாலும் காய்க்காது. காய்த்தாலும் விதையுண்டாகாது. விதை உண்டானாலும், அது முளைக்காது. அதனால், இந்தக் கலப்புச் செடி(Hybrid)யின் வளர் குருத்தில் கால்சிசீன் என்ற வேதிப்பொருளின் நுண்ணிய கரைசல் தெளிக்கப்பட்டு வளர்ந்தது. அப்போது இச் செடியில் 2n = 29 என்றிருந்த இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 58 என இரு மடங்காகி விட்டது. அப்போது இதன் பூக்கள் காய்த்து எள்ளை விடச் சற்றுப் பெரிய விதைகளைத் தந்தன. இவ்விதைகளைத் தெளித்து, அடுத்த தலை முறையில் இச்செடிகளை வளர்த்து, இதன் விதைகளைச் சோதனை செய்தனர். ஆனால், இயற்கையன்னையின் திருவிளையாடல்தான் என்னே! இந்தக் கலப்பு எள்ளுச் செடி எவ்வித மழையையும், வெய்யிலையும் தாங்கும் பண்பினைப் பெற்றதாயினும், இதன் விதைகளில் எண்ணெய் மிக மிகக் குறைந்து விட்டது. புண்ணாக்குப் பொருள்தான் மிகுந்தது. அதனால் இவ்வாராய்ச்சி அவ்வளவில் கைவிடப்பட்டது.