பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

572

சங்க இலக்கியத்

அழைத்தல் கூடாது என்னும் கருத்தைப் புலப்படுத்தும் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது.

முள்ளி–2. கழிமுள்ளி இலக்கியம்

இந்த முள்ளிச் செடி உப்பங்கழியிடத்தே மிகுதியும் வளர்தலின், நெய்தல் நிலத்ததாகும். இதிலும் முட்கள் செறிந்திருக்கும். ஆயினும், முட்கள் வளைந்திரா. இதன் மலர் நீலமணி போன்று வண்ண வடிவ உவமங்களை உடையது.

“கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழாஅலவும்”
-சிறுபா. 148


என்ற இவ்வடிகட்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘முதற் சூலை உடைய கழிமுள்ளி நீல மணி போலப் பூக்கும்’ என்பார்.

“மணிமருள் மலர முள்ளி அமன்ற”-அகநா. 236 : 1

என்றார் பரணரும்.

“மணிப்பூ முண்டகத்து மணல் மலிகானல்
 பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப”
-மதுரை. 96-97

என்ற அடிகளுக்கு ‘நீலமணி போலும் பூக்களை உடையவாகிய கழிமுள்ளிகளை உடைய மணற்குன்றுகள் மிக்க கடற்கரையிலிருக்கும் பரதவருடைய மகளிர் குரவைக் கூத்தின் ஒசையோடே கூடி ஆரவாரியா நிற்ப’ என்பார் நச்சினார்க்கினியர்.

முள்ளி—2. கழிமுள்ளி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே (Bicarpellatae)
அகவிதழ் இணைந்தவை
பர்சொனேலீஸ் (Personales)
தாவரக் குடும்பம் : அக்காந்தேசி (Acanthaceae)
தாவரப் பேரினப் பெயர் : அக்காந்தெஸ் (Acanthus)
தாவரச் சிற்றினப் பெயர் : இலிசிபோலியஸ் (illicifolius)
சங்க இலக்கியப் பெயர் : முள்ளி