பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

590

பிற்கால இலக்கியப் பெயர் : கஞ்சங்குல்லை
உலக வழக்குப் பெயர் : நாய்த் துளசி, புனத் துளசி
ஆங்கிலப் பெயர் : வொயில்டு பேசில் (wild basii)
தாவர இயல்பு : வெற்றிடங்களில் 2-4 அடி உயரம் வரையில் தழைத்துக் கிளைத்து வளரும் செடி. இது துளசிச் செடியைப் பெரிதும் ஒத்தது.
இலை : துளசி இலையைக் காட்டிலும் சற்று அகன்று, நீண்டிருக்கும். (1.5" X .5") இலைக் காம்பு நீண்டது. இலையில் நுண்மயிர் இருக்கும்.
மஞ்சரி : நறுமணமுள்ளது. கிளை நுனியில் நுனிவளர் பூந்துணர். துணர்க்காம்பில் இதன் மலர்கள் அடுக்கடுக்காக உண்டாகும்.
மலர் : மங்கிய வெண்ணிறமானது. துளசி மலரை ஒத்தது.
புல்லி வட்டம் : 4 அகவிதழ்களும் இணைந்து, பசிய குவளை வடிவாக இருக்கும். இதற்குள் நுண்மயிர் அடர்ந்திருக்கும்.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் இணைந்து, அடியில் குழல் போன்றும், மடல்கள் மேலே இரு உதடுகளைப் போன்று வாயவிழ்ந்தும் இருக்கும்.
மகரந்த வட்டம் : இரு மகரந்தத் தாள்கள் உயரமாகவும், மற்ற இரு தாள்கள் குட்டையாகவும் இருக்கும்.
சூலக வட்டம் : 2 செல் உடையது. எனினும், நான்கு ‘நட்லெட்’ என்ற உலர் கனி.
கனி : நான்கும் சிறியவை. மிக நுண் குழிகள் காணப்படும். வழவழப்பானவை.

இச்செடியின் இலைகளில் நறுமணமிருத்தலின், கண்ணி தொடுக்குநர் இதனை இடையிட்டுத் தொடுப்பர். இச்செடி மருந்துக்கு உதவும் என்பர்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 24 என்று மார்ட்டன் ஜே.கே. (1952) என்பவரும், 2n = 64 என்று டோயோச்சுக்கி (1936, 1937) என்பவரும் கண்டுள்ளனர்.