பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

45

நெய்தல் மலர் கருநீல நிறமும் நறுமணமும் உள்ளது. அகன்று நீண்ட இதழ்களை உடையது. பூ நீலமணி போன்றதெனவும், கண் போன்றதெனவும் நெடுநேரம் சுனையாடிக் கயம் மூழ்கும் மகளிரின் உள்ளகம் சிவந்த கண்களைப் போன்றதெனவும் கூறுவர்.


“நீள்நறு நெய்தல்”-நற். 382, புறநா. 144

“மணிமருள் நெய்தல்”-மதுரை. 282

“கணைத்த நெய்தல் கண்போல் மாமலர்”-அகநா. 150

“மணிக்கலந் தன்ன மாஇதழ் நெய்தல்”-பதிற். 30

“சிறுகரு நெய்தல் கண்போல் மாமலர்”-அகநா. 220

“பாசடை கிவந்த கணைக்கால் நெய்தல்
 கயம்மூழ்கு மகளிர் கண்ணின் மானும்”
-குறுந். 9

நற்றிணையில் ஒரு காட்சி :

திருமணத்தை இடை வைத்துப் பொருள் தேடச் சென்ற தலைவன் குறித்த பருவத்தில் வரவில்லை. அதனால் தலைவி வருந்திக் கொண்டிருக்கிறாள். தலைவன் வரைவொடு வருகின்ற குறிப்பறிந்த தோழி தலைவியை நோக்கி, “நமது கழியின் கண்ணே தலைவன் நிதியுடன் வருகின்ற தேரின் ஒலியைக் கேட்பாயாக” என்று சொல்கின்றாள். இதனை நற்றிணைப் புலவர் நெய்தல் திணையின் ஒரு காட்சியாகச் சித்திரிக்கின்றார். உப்பங்கழியில் (Back water) நீர் தேங்கி நிற்கிறது. நீர் தண்மையாக உள்ளது. அதில் சுறா மீன்கள் மலிந்துள்ளன. உப்பங்கழியின் கரையோரத்திலே புன்னை மரமும் பூத்திருக்கின்றது. புன்னையின் பூக்கள் தமது பொன்னிறமான தாதுக்களை நெய்தல் மலர் மேல் நிலவும் படியாகத் தூவுகின்றன. இக்கானலிடத்தே வீழ் ஊன்றிய அடியை உடைய தாழையின் மலர் மணம் கமழ்கின்றது. இங்ஙனமாக இயற்கையன்னை எழில் குலுங்கும் கானல். இந்த இயற்கையுண்மையைக் கூறுமிடத்து இப்பொருள்பட இதனைக் கூறுகின்றார். கழியில் கோட்சுறா வழங்குமென்பது தலைவியின் களவொழுக்கம் சேரியில் அலராகின்றதையும், அக்கழியினிடத்தே பூத்த நெய்தல் மலர் நிறையும்படியாகப் புன்னை மரம் தனது நுண்ணிய பொன்னிறத் தாதை உகுக்கும் என்பது - ‘சேரியிடத்து நமர் கையேற்ப நிரம்பிய பொற்குவியலைச் சேர்ப்பன் நம்மை வரைதற் பொருட்டுக் கொடாநிற்பன்’ என்பதும், ‘தாழம்பூவின் மணம் கானல் எங்கும் கமழும் என்பது - அவன் வரைவு நாடெங்கும் மாட்சிமைப்படும்’ என்பதும் இறைச்சிப் பொருளாக இப்பாட்டில் காணப்படுகின்றன.