பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பூளை
ஏர்வா டொமென்டோசா (Aerva tomentosa,Forsk.)

சங்க இலக்கியங்கள் இதனைப் ‘பூளை’ என்று குறிப்பிடுகின்றன. இது ஒரு புதர்ச் செடி. வெண்ணிறமான நீண்ட பூங்கொத்துக்கள் இதன் கிளை நுனியில் உண்டாகும்.

இதில் ‘சிறுபூளை’ என்று ஒன்றுண்டு. அதனைக் ‘குரீஇப் பூளை’ என்று கபிலர் குறிப்பிடுவர்.

சங்க இலக்கியப் பெயர் : பூளை
தாவரப் பெயர் : ஏர்வா டொமென்டோசா
(Aerva tomentosa,Forsk.)

பூளை இலக்கியம்

சங்க இலக்கியங்கள் ‘பூளைப்’ பூக்களையே பேசுகின்றன. இது ஒரு சிறு புதர்ச் செடி. வறண்ட பாழிடங்களில் வளர்வது. பூளையின் பூங்கொத்து நீளமானது. இதன் மலர் வரகுச் சோற்றை ஒத்த வடிவானது. மங்கிய வெண்ணிறமானது. கோடைக்காலத்தில் மலர்வது. மலர்கள் காற்றடிக்கும் போது வதங்கிக் குழையும். கரும்பின் பூவை ஒத்துக் காற்றில் மிதக்கும்.

“பூளை நீடிய வெருவரு பறந்தலை”-புறநா. 23 : 20
“கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர”-அகநா. 217 : 5

“நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன

 குறுந்தாள் வரகின் குறள்அவிழ்ச் சொன்றி”- பெரும்பா. 192-193
(சொன்றி-சோறு)
“வளிமுனைப் பூளையின் ஒய்யென்று அலறிய”-அகநா 199 : 10