பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

604

சங்க இலக்கியத்

பட்டினப்பாலையில் கோட்டை மதிலைத் தாக்க எழுந்த களிறு, பூளையொடு உழிஞைப் பூவையும் சூடிச் சென்றதாகக் கூறுவர்.

“வேறுபல் பூளையொடு உழிஞை சூடி”-பட்டின. 235

பிங்கலம் இதனை வெற்றிப்பூ என்று கூறும்[1]. திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளைக் கம்பர் ‘பூளைசூடி’ என்று குறிப்பிடுகின்றார்[2]. மடலேறுவோன் பிற மலர்களோடு பூளைப் பூக்களையும் சூடிக்கொள்வான் என்பர்.

பூளை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : மானோகிளமைடியே
(Monochlamydeae),
புல்லி வட்டமும் அல்லிவட்டமும், இணைந்து, ‘பீரியாந்த்’ எனப்படும்.
தாவரக் குடும்பம் : அமராண்டேசி (Amarantaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஏர்வா (Aerva)
தாவரச் சிற்றினப் பெயர் : டொமென்டோசா (tomentosa)
சங்க இலக்கியப் பெயர் : பூளை
உலக வழக்குப் பெயர் : பூளை
தாவர இயல்பு : சிறு புதர்ச் செடி. நேராக நீண்டு வளரும். செடி முழுவதும் நுண்மயிர் அடர்ந்திருக்கும்.
இலை : தனியிலை. மாற்றடுக்கில் நீண்டு, அகன்றது. இலை முழுதும் நுண்மயிர் அடர்ந்திருக்கும். 2.5 அங்குல நீளமும் 0.5 அங்குல அகலமும்.
 

  1. “பூளை வெற்றிப் பூவாகும்மே” -பிங். நி. 1498
  2. கம்பராமா. அகலிகை. 39