பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

மிளகு–மிரியல்–கறி
பைப்பர் நைகிரம் (Piper nigrum,Linn.)

சங்க இலக்கியங்களில் மிளகுக்கு மிரியல், கறி என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இது ஒரு புதர்க்கொடி.

சங்க இலக்கியப் பெயர் : மிளகு, கறி, மிரியல்
தாவரப் பெயர் : பைப்பர் நைகிரம்
(Piper nigrum,Linn.)

மிளகு–மிரியல்–கறி இலக்கியம்

‘மிளகு’ உண்டாகும் புதர்க்கொடி உயர்ந்த மலைச் சாரலில் வளர்கிறது. இக்கொடியில் விளையும் விதைதான் மிளகு ஆகும். இக்கொடி கரிய நிறமுடையதென்றும், பசிய இதன் காய்கள் நீண்ட கொத்துகளாக இருக்குமென்றும் பெருங்கௌசிகனார் கூறுவர்.

“கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி”

-மலைப. 521
மிளகுக்குக் கறி என்ற பெயரும் உண்டென்பதை இவ்வடியில் காணலாம். நாம் உண்ணும் சோற்றுக்கு ஒரு சாறும் வேண்டப்படும். இச்சாற்றுக்கு நல்ல உரைப்பு உள்ள மிளகைச் சேர்த்துக் கறி ஆக்குவர். அதனால் மிளகுக்குக் கறி என்ற பெயரும் வந்தது போலும். அந்நாளில் ‘மிளகாய்’ பயன்பட்டதாகத் தெரியவில்லை. மிளகைப் போன்ற உரைப்புள்ள காயாகிய (மிளகு+ காய்) மிளகாய் பிற்காலத்தில் பயிரிடப்பட்டு வருகின்றது. மற்று மிளகுக்கு ‘மிரியல்’ என்ற இன்னொரு பெயரைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் சேர்ப்பர். மிளகுப் பொதிகளைக் கழுதை மேலேற்றிக் கொண்டு வணிகர் செல்வர் என்கிறார்.

“. . .. . . . . . . . மிரியல்

 புணர்ப்பொறை தாங்கிய”-பெரும்பா. 78-79