பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

610

மஞ்சரி : இலைக்கெதிரில் ஆண், பெண் பூக்கள் தனித்தும், இருபாலான பூக்களும் இருக்கும்.
மலர் : பூக்கள் பூவடிச் செதிலில் இருக்கும். இச்செதில்கள் இணர்க் காம்பில் ஒட்டியிருக்கும். ஆணிணர் 4-5 அங்குல நீளமானது. பெண்ணிணர் 6 அங்குலம் நீளமானது.
புல்லி, அல்லி வட்டங்கள் : தனித்து இல்லை. இணைந்திருக்கும்.
மகரந்த வட்டம் : ஆண்மலரில் குட்டையான 2-4 தாதிழைகள் காணப்படும். தாதுப்பை இரு செல்லாலானது.
சூலக வட்டம் : பெண் மலரில் சூலகம் ஒரு செல் உடையது. ஒரு கருவே விளையும்: சூல்தண்டு குட்டையானது: சூல்முடி 2-5 பிளவானது.
கனி : காய் பச்சை நிறமானது. காய் முதிர்ந்து கனியாகி, அதுவே விதையுமாகும். பெர்ரி என்ற சதைக்கனி.
விதை : மிளகு உருண்டை வடிவானது. விதையுறை மெல்லியது.

மிக நல்ல உரைப்புள்ள உணவுப் பொருள் மிளகு. இம்மிளகுக்காக இக்கொடி பயிரிடப்படுகிறது. 1500 முதல் 5000 அடி உயரமான மலைப்புறத்தில் வளரும். இதன் இலைக் கணுவில் முதலில் வேர் உண்டாகும். இவ்வேர் மண்ணில் ஊன்றிய பின்னர், கொடி தழைத்துக் கிளைத்து வளரும். இதில் வெள்ளை மிளகும் உண்டு. வால் மிளகு என்பது வேறு கொடியில் விளையும். அதற்குப் பைப்பர் லாங்கம் என்று பெயர். தமிழ்நாட்டில் இருந்து தொன்று தொட்டு மிளகு சீனம், கிரேக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் பட்டதென்று பண்டைத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 48 என ஏ. கே. சர்மா, என் கே. பாட்டாச்சாரியா (1958 பி, 1959 இ) என்போரும் 2n = 52, 104 என மாத்தியூ (1958 பி) என்பாரும் 2n = 128 என சானகியம்மாளும் (டி 1945) கணித்துள்ளார்கள்.