பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

51

மேலும் இதன் மலர் விரியும் போது நறுமணம் வெளிப்படும். இதழ்களுக்கு அடியில் உட்புறமாகத் தேன் சுரப்பிகள் உள்ளன. இதன் தேனும் நறுமணமுடையது. ஆதலின் ‘கட்கமழ் நறுநெய்தல்’ எனப் புலவர் பாடுவர். இதன் நறுமணத்தால் ஈர்க்கப்பட்ட சுரும்பு நெய்தலின் மதுவையும் மகரந்தத்தையும் உண்டு மகிழும்.

நெய்தல் நிலம்

பாண்டியன் நாடு ஐவகை நிலங்களும் அமையப் பெற்றது. இவற்றை விவரிக்கும் மதுரைக் காஞ்சி நெய்தல் நிலத்தின் பொதுவியல்புகளைக் (314-325) கூறுகின்றது.

பெருநீர் ஓச்சுநர் தமது நாவாயின் கண்ணே கடல் தந்த முத்துக்களையும், விளங்கும் வளையல்களையும், உப்பு, புளி, மீன் உணங்கல் முதலாய பலவாய் வேறுபட்ட பண்டங்களையும் ஏற்றியுள்ளனர். யவனம் முதலிய தேயத்தினின்றும் கொண்டு வந்த குதிரைகளும் அவற்றுள் உள்ளன. இவ்விடத்துண்டாகிய பேரணிகலன்களையும் பிறவற்றையும் ஆண்டுச் செலுத்துதற்கு இப்பரிகள் வேண்டப்படும். இவை நாள் தோறும் நிகழும் நடைமுறை. இவை மிகுகையினாலே நெய்தல் நிலப் பாங்கு வளம் பல பயிலப்பட்டு உள்ளது என்பர் மாங்குடி மருதனார்.

நெய்தல் (கருங்குவளை) தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : நிம்பயேசீ (Nymphaeaceae)
தாவரப் பேரினப் பெயர் : நிம்பேயா (Nymphaea)
தாவரச் சிற்றினப் பெயர் : வயலேசியா (violacea, )
தாவர இயல்பு : நீர் வாழ் செடி, பல பருவ நீர்த் தாவரம்
தாவர வளரியல்பு : நன்னீரிலும், கழிநீரிலும், உப்பங் கழியிலும் பல்லாண்டு வாழும் நீர்ச் செடி