பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

681

“மன்றத்து துறுகல் மீமிசைப் பலவுடன்
 ஒண்செங் காந்தள் அவிழும் நாடன்”
-குறுந் 284 : 2-3

எனவும் மலைத்தொடர்புடனே செங்காந்தள் கூறப்படுவது புலானகும்.

இவற்றை எல்லாம் நோக்குமிடத்து செங்காந்தள் ஒன்றே மலைத் தொடர்புடைய குறிஞ்சி நிலத் தாவரமென்பது, காந்தளின் பெயரால் குறிக்கப்படும் செங்கோடலும், தோன்றியும் இங்ஙனம் மலைத் தொடர்புடன் கூறப்படாமையின், இவை செங்காந்தளினின்றும் வேறுபட்டவை போலும் என்பதும் சிந்திக்கற்பாலது.

மேலும் காந்தள் நிலப்பரப்பிலிருந்து 6000 அடி உயரம் வரையிலான மலைகளில் வளரும் என்ற இற்றை நாளைய தாவரவியல் உண்மை வலியுறுத்தப்படுவது காண்க.

காந்தள் மலரின் எழில் கருதியும் மகளிரோடு ஆடவரும் விரும்பிச் சூடிக்கொண்டனர். பெரிதும் இது கண்ணியாகவே சூடப்பட்டது.

முருகப் பெருமானுக்குரிய அடையாளப் பூ காந்தள் என்பதும், முருகன் காந்தளின் பெரிய நறுங்கண்ணியைச் சென்னியில் சூடியவன் என்பதும் முன்னரே கண்டோம்.

“காந்தள்அம் கண்ணிச்செழுங் குடிச்செல்வர்” -பதிற். 81 : 22

என்பதால், செழுங்குடிச் செல்வரும்,

“காந்தள் அம்கண்ணி கொலைவில் வேட்டுவர்” -பதிற் 30 : 9

என்பதால், கொலைகார வேட்டுவரும் சூடினர் என்பர்.

“. . . . . . . . காந்தள் நாறும்
 வண்டிமிர் சுடர் நுதல் குறுமகள்”
-ஐங். 254 : 2-3

என்றவதனால், ஒருத்தி காந்தளின் மலரைச் சூடி துதலில் மணமேறப் பெற்றாள்.

“மலர்ந்த காந்தள் நாறிக்
 கலிழ்ந்த கண்ணள்”
-ஐங். 259 : 5-6