பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

687

கனி : கனியை அரை வெடி காப்சூல் என்பர். விதைகள் சற்று உருண்டை வடிவானவை . விதையின் புறவுறை, கடற் பஞ்சு போன்றது. கரு-உருளை வடிவானது.
நிலம் : குறிஞ்சி

காந்தள் கொடியில் வேருடன் கிழங்கு உண்டாகும். அதற்குப் பச்சை நாவி என்று பெயர். அதில் கால்சிசின் (Colchicine) என்ற கொடிய நச்சுப் பொருள் (வேதிப் பொருள்) காணப்படுகின்றது. இக்கிழங்கிலிருந்து வேதியியல் முறையில், அந்த நச்சுப் பொருளைப் பிரித்து எடுத்துப் பல்வேறு செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். முதற்கண், இது சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. தாவர இயலில்-செல்லியலில்-இந்தக் கால்சிசின் பெரிதும் வேண்டப்படுகிறது. இந்த வேதிப் பொருளை 5 பி. பி. என்.- அதாவது, பத்து லட்சம் பகுதியில் ஐந்து பகுதியான நீர்க் கரைசலைத் தாவரங்களின் நுனிக் குருத்திலும், முகைக் குருத்திலும் முறையாகத் தெளித்து வந்தால், அத்தாவரத்தின் செல்களிலுள்ள (Cells) குரோமோசோம்கள் (Chromosomes) இரு மடங்காகப் (பிளந்து) பெருகி விடும்.

காந்தள் கொடியைத் தாவர இரட்டைப் பெயர் முறையில் குளோரியோசா சுபர்பா என்பர். குளோரியோசா என்னும் இப்பேரினத்தில், பதினொரு சிற்றினங்கள் உள்ளன. இவற்றுள் ஆறு சிற்றினங்கள் ஒரு வகையாகவும், ஐந்து சிற்றினங்கள் ஏனையதொரு வகையாகவும் பிரிந்தன என்பர். சுபர்பா என்னும் சிற்றினம் (காந்தள்) இந்த ஐந்து வகையுள் ஒன்றாகும். காந்தள் கொடியில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை n = 11 ஆகும். இதனை 2n = 22 எனச் சானகி அம்மையாரும் (1945), 2n = 88 என லாகோர் (La-Cour) அம்மையாரும் (1951) அறுதியிட்டனர். 2n = 22, 90 என ஏ. கே. ஷர்மா (1961) கணித்தார்.