பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

704

புல்லி வட்டம் : ஆண் மலரில் 3 புறவிதழ்கள் மிகச் சிறியவை.
அல்லி வட்டம் : 3 அகவிதழ்கள் நேர் அமைப்பில்;
மகரந்த வட்டம் : ஆண் மலரில் 6 தாதிழைகள். தாதுப் பைகள் நீளமானவை.
சூலக வட்டம் : பெண் மலரில் 3 அல்லிகளும், 3 புல்லிகளும் அகன்ற இவை சூலகத்தினை மூடியிருக்கும். சூலகம் 3 செல் உடையது. 3 சூலறையிலும், 3 சூல்கள். சூல்முடி 3 பிளவானது. அடிப்புறத்தில் வளைந்து விடும்.
கனி : இளந்தேங்காயில் நறுஞ்சுவையுடைய நீர் மிகுந்திருக்கும்; முற்றிய காய் தானே பழுத்துக் கீழே விழும்.
காய் : முப்பட்டை எடுப்பானது; “மீசோ கார்ப்” நார் உடையது; “எண்டோ கார்ப்” வலிய ஓடு உடையது; அடியில் 3 துளைகளை உடையது.
விதை : ‘கொப்பறை’ எனப்படுவதுதான் விதை உள்ளே கூடு விழுந்திருக்கும்; அதிலிருந்த நீர் சுண்டி விடும். மூன்று துளைகளில், ஒன்றிலிருந்து முளை வெளிப்படும்.

தெங்கு எந்த நாட்டைச் சேர்ந்தது என்று சரி வரத் தெரியவில்லை என்கிறார் காம்பிள். இதன் காய்களுக்காக இம்மரம் பெரிதும் பயிரிடப்பட்டு வருகிறது: கடற்கரைப் பகுதிகளில் மிக அதிகமாக வளர்கிறது; பாளை முதிர்வதற்குள், அதனை நசுக்கி அதிலிருந்து வடியும் சாற்றை (கள்) வடித்தெடுப்பர். தேங்காயின் இளங்காய் இளநீராகவும், சற்று முதிர்ந்த காய் உணவாகவும், முற்றிய ‘கொப்பறை’யிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய், பலவாறாகவும் பயன்படும்.

இந்நாளில் தென்னையில் பலப்பல வகைகள், செல்லியல் கலப்பு முறையினால் உண்டாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன: இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 32 என சான்டோஸ் (1928), காஸ்நெர் (1944), சானகி அம்மாள் (1945) சர்மா ஏ. கே. சர்க்கார் (1957) என்போர் கணக்கிட்டுள்னர்.