பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

706

சங்க இலக்கியத்

பனையை நாம் மரம் என்று வழங்குகின்றோம். ஆனால், இது மர இனத்தைச் சேர்ந்ததன்று. இது புறத்தில் காழ் கொண்டு இருக்கும். இங்ங்னம் புறவயிர்ப்பு கொண்டனவற்றைப் புல்லெனப் பேசுகின்றது தொல்காப்பியம்.

“புறக்கா ழனவே புல்லென மொழிப” -தொல். பொருள். 9 : 86

பனையில் ஆண் மரமும், பெண் மரமும் காணப்படும். ஆண் பனையின் பாளையில் இருந்து கிளைத்த கதிர்கள் நீண்டு திரண்டிருக்கும். அவற்றினின்றும் சிறு ஆண் பூக்கள் விரியும். பூவில் தடித்த புறவிதழ்களும், 3 அகவிதழ்களும், 6 மகரந்தக் கால்களும் தோன்றும். பெண் பனையின் பாளையிலிருந்து பட்டையான 3 புறவிதழ்களும், 3 அகவிதழ்களும், கோளவடிவான பெண்ணகத்தைக் கொண்டிருக்கும். இதுவே மகரந்தச் சேர்க்கையின் பின்னர் பிஞ்சாகிப் பனங்காயாகும். இளங்காயில் உள்ள மூன்று நுங்குகளும், முற்றி விதைகளாகி விடும். காய் முற்றிப் பழமான பின், பனம் பழம் தானே விழும். அதற்குள் மூன்று விதைகள் இருக்கும்.

பனையின் பஞ்சு போன்ற நுங்கைப் பாடுகின்றார் திரையன்:

“பாளை தந்த பஞ்சிஅம் குறுங்காய்
 ஓங்கிரும் பெண்ணை நுங்கு”
-குறுந் . 293 : 2-3

பனையின் இவ்விருவகைப் பூக்களும் மஞ்சள் கவினிய வெண்ணிறங் கொண்டவை. இவையிரண்டுமே சூடிக் கொள்ளும் வாய்ப்பற்றவை. ஆதலின், பனையின் வெளிய இளங்குருத்து ஓலையைப் பிளந்து, அதன் கூரிய வலப்பக்கத்துப் பாதியைக் குடிப்பூச் சின்னமாகக் சூடிக் கொண்டனர்.

“இரும்பனை வெண்டோடு மலைந்தோன்” -புறநா. 45 : 1
(தோடு-தடித்த பனையோலை)
“. . . . . . . . வளர்இளம் போந்தை
 உச்சிக் கொண்ட ஊசிவெண் தோட்டு”
-புறநா. 100 : 3-4
(வளர் இளம் போந்தை-குருத்தோலை)
“மிசையலங் குளைய பனைப்போழ் செரீஇ” -புறநா. 22 : 21

மேலும்,

“இரும்பனம் போந்தைத் தோடும்” -பொருந. 143