பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

57

“முள்ளரைத் தாமரை புல்லிதழ் புரையும்
 நெடுஞ்செவிக் குறுமுயல் . . . . ”
-பெரும்பா. 114-115

(புல்லிதழ்-மெல்லிய இதழ்)

சேற்றில் வளரும் செந்தாமரை, கதிரவனைக் கண்டு மலர்வது. ஐந்து புறவிதழ்களை உடையது. அகவிதழ்கள் ஏறக்குறைய 20-25 ஒரே மாதிரியாக இருக்கும். தாமரையில் நூற்றுக்கணக்கான அகவிதழ்கள் உன்டென்பர் புலவர்.

“சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ்
 நூற்றிதழ் அலரின் நிரை கண் டன்ன
 வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து”

-புறநா. 27: 1-3

“நூற்றிதழ்த் தாமரை”-ஐங்: 20

கதிரவன் தாமரையை மலர்த்தித் தனது வெப்பத்தை அதனுள் பெய்தான். மாலையில் பனி பெய்யுங்கால் தாமரை கூம்பியது. கதிரவன் வைத்த சிறு வெப்பம் உள்ளே பொதிந்திருந்தது. இதனை ஒத்தவள் தலைவி என்பது மோசிக்கொற்றன் கூற்று

“ . . . . . . . . . . . . . . . .பனியே
 வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென
 அலங்கு வெயிற் பொதித்த தாமரை
 உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே”
-குறுந்., 376 : 4-6

போது மலராகி விரியும் போது மலரின் உட்புறத்தில் சிறிது வெப்பம் உண்டாகுமென்பது தாவர அறிவியலுண்மை. இதனைச் ‘சூடுதரு புதுப்பூ’ என்று புலவர் பாடுவர். இதனை விரிவாகப் பிறிதோரிடத்திற் கூறினாம்.

தாமரைப்பூவின் நடுவே நீண்டு உருண்ட ‘பொகுட்டு’ இருக்கும். இதனைச் சுற்றி மகரந்தத் தாள்கள் மலிந்திருக்கும். இவற்றில் தாதுக்கள் உண்டாகும். இவற்றை உண்ணுதற்கு வண்டுகள் மொய்க்கும். இவ்வுண்மைகளைத் தொகுத்து மதுரை மாநகரின் அமைப்பாகப் பாடுகின்றார் ஒரு புலவர்.

“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
 பூவொடு புரையும் சீர் ஊர், பூவின்
 இதழகத் தன்ன தெருவம்; இதழகத்து
 அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்
 தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்
 தாதுண்பறவை அனையர் பரிசில் வாழ்நர்”

-பரி.திரட்டு : 8