பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/750

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

734

சங்க இலக்கியத்

இப்புல் பாலைச் சுரத்தில் வளரும்; வெள்ளிய கொத்தான பூக்களை அவிழ்க்கும்; முதுகில் வரிகளைக் கொண்ட அணிலின் வால் போன்ற வடிவாகத் தோன்றும்; பூ மலர்ந்து முதிர்ந்து கனியாகி, பழுத்த பின்னர் கழன்று (விதையாக) உதிர்ந்து விடும். இவ்வாறு கழன்று வீழ்ந்த, இதன் முதுபூ-போர்க்களத்தில் களிறோடு பட்டு வீழ்ந்த மன்னனுடைய கரிய குடுமியில் தங்கியதென்கிறார் ஒரு புலவர்.

“வேனல்வரி அணில் வாலத்து அன்ன
 கான ஊகின் கழன்றுஉகு முதுவீ
 அரியல் வான்குழல் சுரியல் தங்க”
-புறநா. 307 : 4-6

ஊகு—ஊகம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி (Glumaceae)
தாவரக் குடும்பம் : கிராமினே (Gramineae)
தாவரப் பேரினப் பெயர் : அரிஸ்டிடா (Aristida)
தாவரச் சிற்றினப் பெயர் : செட்டேசியா (setacea)
சங்க இலக்கியப் பெயர் : ஊகு
உலக வழக்குப் பெயர் : ஊகம் புல்; துடைப்பம் புல்
தாவர இயல்பு : ஒரு வகையான புல்; குத்துக் குத்தாக வளரும்; பல்லாண்டு வாழும்; ஆண்டுக்கொரு தரம் இதன் குச்சிகள்–கோல் ‘கல்ம்’ ஓங்கி, 4-48 அங். நீளம் வரை வளரும். மெல்லிய குச்சி வெண்மையானது.
இலை : 20 அங். நீளமான, மெல்லிய, பசிய இலை.
மஞ்சரி : கலப்பு மஞ்சரி; ‘ஸ்பைக்லெட்’ எனப்படும். பல மலர்கள் குச்சியின் நுனியில் கொத்தாக, அடர்ந்து பூக்கும்; வெண்மையானவை.