பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

738

அறுகம்புல் பெரிதும் தரை அடிமட்டத் தண்டிலிருந்துதான் வளரும். நுனியில் குருத்து மேல்நோக்கி வளர்ந்து வரும், இப்புல் இறவாமல் என்றும் நிலைத்து வளர்ந்து வாழ்ந்து வருவது எதனால் என்பதை இந்நாளில் ருஷ்ய நாட்டு உயிரியல் அறிஞர்கள் ஆய்ந்து வருகின்றனர். இப்புல்லின் வளருங்குருத்தில் உள்ள செல்களை நுண்ணோக்கி மூலம் காணும் போது, அவற்றில் செல்லின் கரு ‘நியூக்ளியஸ்’ (Nucleus) காணப்படும். அதில் உள்ள ‘நியூக்கிளியோலஸ்’ (Nucleolus) என்ற உட்கருவை எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் ஏறத்தாழ 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மடங்கில் பெரியதாக்கிப் பார்க்குமிடத்து, அவற்றில் உள்ள குரோமோசோம்களின் (Chromosome) டி.என்.ஏ; ஆர்.என்.ஏ. என்னும் மூலக்கூற்று அமிலங்கள் தென்படும். அவற்றில் பாரம்பரியத்தைத் தொடரச் செய்யும் ஆர் என் ஏ அமிலத்தின் மூலக்கூறுகள் (molecules) கணந்தோறும் சிதைந்து கொண்டு வருவதையும், (damaged) அவற்றை உடனுக்குடன் சரிபார்த்து. சீர்படுத்தும் மிக அற்புதமான சுரப்பி நீர் (Hormones) இம்மூலக்கூற்று அமிலத்தாலேயே உண்டாக்கப் படுகின்றன என்பதையும், அவையே சிதைந்து மூப்பைத் தரும் ஆர் என் ஏ அமிலத்தின் மூலக்கூறுகளைச் சிதையாமல், கணந்தோறும் செப்பனிடுகின்றன (repair) என்பதையும் மிகத் துல்லியமாக ஆய்ந்து கண்டுள்ளனர். இந்த அற்புத சுரப்பிநீர் வேறு எந்தவிதமான உயிர்களின் ‘நியூக்கிளியோலஸ்’களிலும் உள்ள ஆர் என் ஏ அமிலத்திலும் உண்டாவதில்லையாம். அதனால் ஏனைய எல்லா உயிர்களும் மூப்படைந்து சாகின்றன. எங்ஙனமாவது இந்த அற்புத சுரப்பி நீரைச் சுரக்குமாறு மனிதக் கருவில் செய்து விட்டால், ‘ஆர் என் ஏ’ மூலக்கூறுகளைச் சிதையாமல் காக்கலாம் என்றும், அப்போதுதான் மனிதன் மூப்பு வராமல் வாழ்வான் என்றும், இதன் தொடர்பான பெரும் பேர் ஆய்வுகளை (Gerontology) நெடிது வாழும் வகை தேடும் ஆய்வுத் துறைகள் மேற்கொண்டுள்ளன என்றும் ‘குப்ரவிஷ்’ என்னும் பேராசிரியர் (பைலோ ரஷ்யன் அகடமி ஆப் சயன்ஸ்) கூறுகின்றார்.

அறுகம்புல் ஆடு, மாடு, மான், குதிரைகளுக்கு மிகச் சத்துள்ள உணவுப் பொருள் ஆகும். இதனை வெள்ள நீர், மழை நீர் நிலத்தை அரித்து விடாமல் காப்பதற்கு ஆங்காங்கே வளர்த்து வருகின்றனர்.

அறுகம்புல்லை மாலையாகத் தொடுத்துப் பிள்ளையாருக்குச் சூட்டுவர்.