பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/767

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

751

என்ற இவ்வடிக்கு ‘ஐவன நெல்லென்னும் வெள்ளிய நெல்லோடே’ என்று நச்சினார்க்கினியர் இங்கு உரை கண்டுள்ளார். ஆகவே, ஐவனம் என்பது வெண்ணெல் என்று கொள்ள வேண்டும்.

“வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல்” -மலைபடு. 115


என்ற இந்த மலைபடு கடாத்தின் அடிக்கு ஐவன நெல்லும், வெண்ணெல்லும் என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர். இங்கு இவரே ஐவன நெல்லையும், வெண்ணெல்லையும் வேறு பிரித்துக் கூறுகின்றார். எனினும் ‘ஐவன வெண்ணெல்’ என்றே இருவிடங்களிலும் பயிலப்படுதலின், இரண்டும் ஒன்றெனக் கோடலே பொருந்தும்.

இவையன்றி, ‘தோரை’ என்ற ஒரு வகையான மலை நெல்லும் பேசப்படுகின்றது. இந்நெல்லை விளைவிப்பதற்காக, மேட்டு நிலத்தில் வளர்ந்திருந்த அகில், சந்தனம் முதலிய மரங்களை வெட்டி, அதில் ‘தோரை’ நெல்லை விதைத்தனர் என்று கூறுவர் மாங்குடி மருதனார்.

“நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை. . . . . . . . . . . .”
-மதுரை. 286-287


தோரை என்பதற்குத் ‘தோரை நெல்’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர்.

“ புயற்புனிறு போகிய பூமலி புறவின்
அவற்பதங் கொண்டன அம்பொதித் தோரை”
-மலைபடு. 120-121


இவ்வடிகட்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘பூ மிக்க காட்டிடத்தே மழையால் ஈன்றணிமை தீர்ந்து முற்றிய அழகிய குலையினை உடைய மூங்கில் நெல் அவலிடிக்கும் செவ்வியைக் கொண்டன’ என்று உரை கூறுகின்றார் இவ்விடத்தில், ‘தோரை’ என்பதற்கு ‘மூங்கில் நெல்’ என்று உரை கூறுவது பொருந்துமாறில்லை. ஆகவே ‘தோரை’ என்பது ஒரு வகை ‘மலை நெல்’ எனக் கோடல் ஏற்புடைத்து.

“பகடுதரு செந்நெல் போரொடு நல்கி” -புறநா. 390: 22


என அவ்வையாரும்,