பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

752

சங்க இலக்கியத்

“செந்நெல் உண்டபைந் தோட்டு மஞ்ஞை” -புறநா. 344  : 1


என அடைநெடுங்கல்வியாரும் செந்நெல்லைக் கூறுவர்.

நெல் பெரிதும் மருத நில வயல்களில் விளைவிக்கப்படுவது. ஆதனுடைய போந்தையின் வளத்தைக் குன்றூர்க்கிழார் மகனார் சிறப்பாகப் பாடுகின்றார்.

“ஏர்பரந்த வயல்;நீர் பரந்த செறுவின்
 நெல்மலிந்த மனை; பொன்மலிந்த மறுகின்”
-புறநா. 338 : 1-2


காவிரி நாட்டில் நெல் விளைவதைக் கல்லாடனார் பாடுகின்றார்.

“காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
 நெல்விளை கழனி அம்பர் கிழேவோன்”
-புறநா. 385 : 8-9


நெல் முற்றுதற்கு முன்னுள்ள நிலைதான் நெல்லின் பூவாகும். இதனை மூடிக் கொண்டு இரண்டு மலட்டு உமிகள் இருக்கும். இதனை ‘எம்டி குளும்’ (Empty glume) என்று கூறுவர். இவற்றிற்குள் ‘லெம்னா’ என்ற மலர் உமி (Fertile glume) ‘பாலியா’ (Palea) இருக்கும். இதனுள் இரு பாலான நெல்லின் மலர்ப் பகுதிகள் காணப்படும். அவற்றில் 2 ‘லாடிகுயூல்’ (Lodicule) என்ற சிறு செதில்களும், 6 தாதிழைகளும், இரண்டாகப் பிரிந்த சூல் தண்டு இழையும், சூல் தண்டின் அடியில் சூலகமும் இருக்கும்.

நெல்லின் பூ மலரும் போது, நீளமான மலட்டு உமிகள் சற்று வாயவிழும். அப்போது, அதற்குள் காற்று புகும். காற்றில் மிதந்து வரும் மகரந்தங்கள் சூல்முடியில் பட்டு முளைத்துச் சூலகத்திற்குள் புகுந்து கருவுறும். இப்பூவில் உள்ள மகரந்தத் தாள்களின் தாது முதிர்ந்து, உள்ளே புகும் காற்றில் மிதந்து, வெளிப்பட்டு அயல் மகரந்தச் சேர்க்கை நிகழும். இங்ஙனம் அயல் மகரந்தச் சேர்க்கை நிகழ்வதால், பால் கட்டிக் கரு முற்றி உண்டாகும் நெல் வளமாக முதிரும். நெல்லில் தன் மகரந்தச் சேர்க்கை பெரிதும் நிகழ்வதில்லை. காரணம், இதன் தாதுக்கள் முதிர்வதற்குள், மலர் விரிந்து காற்று உள்ளே புகுந்து விடும். ஒருக்கால், தன் மகரந்தச் சேர்க்கை நிகழுமாயின், அதனால் உண்டாகும் நெற்கனி அத்துணை வளப்பமாக இருப்பதில்லை. மகரந்தச் சேர்க்கை நிகழாத நெல் மலர் கருக்காயாக முதிர்ந்து விடும்.