பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

சங்க இலக்கியத்

கோங்கமலரின் தாது பொன்னிறமானது. மகளிரின் பசலை நிறத்திற்கு உவமையானது. மாந்தளிர் போன்ற நிறங்கொண்ட மங்கையர் உடலில் பொன்னிறமான பசலை, மாந்தளிர் மேல் கோங்கந் தாது கொட்டியது போன்று அழகு செய்தது என்று பாடும் கலித்தொகை.

“மணிபொரு பசும்பொன்கொல் மாஈன்ற தளிரின்மேல்
 கணிகாரம் கொட்கும்கொல் என்றாங்கு
 அணிசெல மேனி மறைத்த பசலையள்”
-கலி. 143 : 4-6

கோங்கம் பூக்குங்காலம் இளவேனிலா அன்றி முதுவேனிலா என்ற ஐயமெழுகின்றது.

‘கோங்கின் பசுவீ மிலைச்சி வேனிற்காலத்தில் தேரொடு வந்தான்’ என ஐங்குறு நூறும்,‘வேனிற்கொங்கு’ என்று புறநானூறும், ‘கோங்கம் குவிமுகை அவிழ . . . . முன்றா வேனில் முன்னி வந்தோரே’ என நற்றிணையும், ‘திணி நிலைக் கோங்கம் பயந்த அணி மிகு கொழுமுகை உடையும் பொழுது’ என இளவேனிற் பத்தில் ஐங்குறுநூறும், ‘சினைப்பூங்கோங்கின் நுண்தாது இளநாள் அமையம் பொன் சொரிந்தன்ன உகுமென்று’ என அகநானூறும் கூறுகின்றமையின். ‘பருவமில் கோங்கம்’ என்ற பரிபாடல் அடிக்குக் ‘காலங்குறியாது பூக்கும் கோங்கு’ என்று பரிமேலழகர் உரை கண்டார் போலும்! கோங்க மலர் சுடர்விட்டுப் பொன்னொளி பரப்புவதாகும். மாலை விலங்கிய சுரத்திலே காற்றடிக்கும் போது கோங்க மலர் காம்பிலிருத்து கழன்று விழுகின்றது. அக்காட்சி ஒருவன் கையில் வைத்திருந்த நெருப்புச் சுடரை விட்டெறிவது போலத் தோன்றும் என்பார் இளங்குட்டுவனார்.

கோங்க மலரிதழ்கள் சற்றுத் தடித்துத் தட்டுப் போன்றவை விரிந்துள்ளன. அதற்கு மேலே மலர்ந்துள்ள குரவ மலரை உழப்பி வண்டினம் முரலும். அதனால், குரவ மலரின் வெள்ளிய இதழ்கள் கோங்க மலரின் பொன்தட்டில் உதிர்கின்றன என்பார் வடமோதங்கிழார். (அகநா. 317 : 8-9)

இதனைப் போன்ற மற்றொரு காட்சியைப் பூதப்பாண்டியனார் விளக்குகின்றார்.

கோங்க மலரின் பொன்னிறத் தாது உதிர்கின்றது. கீழே செக்கச் சிவந்த இலவ மலர் மேனோக்கி விரிந்து பவளக்கிண்ணமாகத் தோன்றுகிறது. இக்கிண்ணத்தில் பொன்துகள் நிறைகின்றன. இதனை விலை கூறி இயலுகின்றார் வேனில் என்னும் விலை கூறுவார்: