62
யார் போன்ற பெண் புலவர்களும் அக்காலத்தில் வாழ்ந்திருந்தனர். பூதப்பாண்டியன் தேவியைப் போல் அரச குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் புலமை நிறைந்தவர்களாக விளங்கியதையும் அறிகின்றோம். இசைக் கலையிலும் நடனக் கலையிலும் வல்ல பெண்கள் ஊர்தோறும் பலர் இருந்ததாகவும் அறிகின்றோம். இவ்வாறே பற்பல துறைகளிலும் பெண்கள் ஆண்களோடு நிகரான திறமும் அறிவும். ஆற்றலும் பெற்று விளங்கினர்.”[1]
சங்க கால மகளிரின் இனிய பெற்றியினை நுணுகி ஆராய்ந்துள்ள டாக்டர் வ. சுப. மாணிக்கம் அவர்களின் கருத்துரை வருமாறு.
“பண்டைத் தமிழ்ச் சமுதாய அளவில் நோக்கின், பெண் கற்கும் உரிமையும் கவிபாடும் உரிமையும் காதலுரிமையும் காதற்களவு செய்யும் உரிமையும் காதலனை இடித்துரைக்கும் உரிமையும் இல்லறத் தொழிலுரிமையும் பெருமையும் புகழும் எல்லாம் ஆடவர்க்கு நிகராகப் பெற்றிருந்தாள் என்பது நெற்றித் திலகம் (வெளிப்படை).”[2]
இனி, வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் இருவர்தம் கருத்தைக் காண்போம்.
டாக்டர் கே.கே. பிள்ளை அவர்கள், “மகளிர்தம் உடல் மென்மை கருதியும், எதிர்த்து நிற்கும் ஆற்றல் கருதியும் மகளிர் அனுதாபத்தோடு கவனிக்கப்பட்டார்கள்” என்று குறிப்பிடுகின்றார்.[3]