பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5. நள்ளி
நள்ளியின் நாட்டு வளனும் தோற்றப் பொலிவும்

நள்ளி என்பானும் கடையெழு வள்ளல்களின் வரிசையில் ஒருவனாகத் திகழவல்லவன். இவனைக் கண்டீரக் கோப்பெருநள்ளி எனவும், கண்டிற்கோப் பெருநற்கிள்ளி எனவும், கண்டிரக்கோன், கண்டிரக்கோ எனவும், நள்ளி யெனவும் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளனர். இவன் தோட்டி என்னும் மலைக்கும் அதனைச் சார்ந்த மலை நாட்டிற்கும் காடுகளுக்கும் தலைவனாக இருந்தவன். இவன் வன்பரணர், பெருந்தலைச் சாத்தனார் என்னும் பெரும் புலவர்களால் பாடப்பட்ட பெருமை சான்றவன். இவன் “இயல்வது கரவேல்” என்பதற்கு இணங்கத் தன்னை விரும்பி வந்தவர்கட்கெல்லாம் இல்லறத்தை இனிது நடத்தப் பொருள்களை ஈந்து மகிழ்ந்தவன். அப்படிக் கொடுக்குங் காலத்தும் "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்," என்பதற் கிணங்க யாதொரு தட்டுத் தடங்கல் இன்றி அளித்து வந்தவன்; நல்ல தோற்றப் பொலிவும் உடையவன். தாள்தோய் தடக்கையூடையவன். இவன் இத்தகைய நல்லோன் ஆதலின், இவன் மலையும் நல்ல மழை வளங்கொண்டு விளங்க, அத்தோட்டி மலைக்குத் தலைவனாக இருந்தவன். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் மழை பெய்யும் அல்லவா?