பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

"எத்துணை ஆயினு மாத்தல் நன்று என
மறுமை நோக்கின்றோ? அன்றே; பிறர்
வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே”

என்று நமக்கு அறிவுறுத்துவார் ஆயினர். ஆகவே, இவன் கொடைமடம் படுபவனே அன்றிப் படை மடம் படான் என்றும் இவன் கொடையினைப் புகழ்ந்தார்.

ஒரு முறை பரணர் பேகனைக் கண்டு பொற்றாமரை யணியினையும் பொன்னரி மாலையினையும் பெற்றுத் தாமும் தம் விறலியுமாக ஒரு சுரத்திடையே இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அதுபோது ஓர் ஏழை இரவலன் இவரைக் கண்ணுற்று, “ஐயன் மீர். நீவிர் யாவீர்?” என்று கேட்டனன். இங்ஙனம் வினாவிய அவனை நோக்கி, “ஐயா யானும் உன் போல் ஓர் இரவலன். யான் பேகன் என்பானைக் காணுதற்கு முன், நின்னைப்போலவே வறுமைக் கோர் உறைவிடமாக இருந்தனன். அவனைக் கண்டதும் என் மிடி தீர்ந்தது. அதன் பின் இங்ஙனம் பூண்களைப் பூண்டு பொலிவு பெற்றனன். அப் பேகன் கரியும் பரியும் பெற்றுக் கண்ணியமாய் வாழ்பவன். தான் கொடுக்கப்போகும் போர்வையை உடுத்திக்கொள்ளாது; போர்த்தும் கொள்ளாது என்பதை அறிந்தும் மயிலுக்குப் பொன்னாடை போர்த்த பெருந்தகை;” எனக் கூறி ஒரு பாணனை ஆற்றுப் படுத்திப் பேகனது கொடைக் குணத்தைச் சிறப்பித்தனர்.

இசையில் ஒரு வசை

பேகன் நல்லோனே ; ஈகையில் ஓகை கொண்டோனே ; புலவர் பாடும் புகழ் உடையோனே