பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

சடுகுடு ஆட்டம்


வெட்சி வீரர்கள் ஒருபுறம். கரந்தை வீரர்கள் மறுபுறம். எதிரெதிராக எல்லைக் கோட்டை மத்தியில் வைத்தபடி அவர்கள் நின்று ஒருவரை ஒருவர் பிடித்துத் தங்கள் எல்லைக்குள் இழுக்க, மற்றவர்கள் திமிறிக் கொண்டு தங்கள் எல்லைக்குள் வந்துவிடப் போரிடுகின்ற போர் முறையிலேதான் ஊர்ப்பகுதியில் சடுகுடு ஆட்டம் தோன்றியிருக்க வேண்டும்.

ஏனெனில், போர் நிகழ்ச்சிகள்தான் தற்கால விளையாட்டுக்களின் முன்னோடிகளாக அமைந்திருக்கின்றன என்பது கண் கூடு. சான்றுக்கு பல போட்டி நிகழ்ச்சிகளைத் தந்திருக்கிறோம் பாருங்கள். வில்வித்தை, குதிரை ஏற்றம், வேலெறிதல், குத்துச் சண்டை, இருவர் போரிடும் மல் யுத்தம், தட்டெறிதல், நெடுந்தூரம் ஓடுதல், தாண்டிக் குதித்தல், கவண் கல் எறிதல் போன்ற அத்தனை போர்ச் செயல் முறைகளும் இன்று காலப்போக்கில் மாறி, வண்மை தவிர்த்து மென்மையாக மாறி, மனிதகுல ஒற்றுமைக்கும் பங்கு பெறுவோரின் உடல் நலத்திற்கும், மன மகிழ்ச்சிக்கும் உறுதுணையாக அமைந்து விட்டிருக்கின்றன என்பதையும் நாம் அறிவோம்.

இவ்வாறே, போர்க் காலத்தில் நிகழ்ந்த ’எதிரிகளைப் பிடித்துத் தப்பித்து வந்த நிகழ்ச்சி’ சிறுவர்களை எதிர்கால வீரர்களாக மாற்றி, ஆயத்தப் பயிற்சியாக மாறி வந்திருக்கலாம் என்ற எண்ணத்திற்கு, சடுகுடு ஆட்டத்தில் இருக்கும் மூச்சடக்கிப் போடும் முறையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தாகவே அமைந்துள்ளது.

தற்காப்புக் கலைக்காகத் தோன்றியது!

இந்திய விளையாட்டுத் துறையில் உள்ள விளையாட்டுக்கள் எல்லாம் தனி மனிதன் பலத்தை