பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

19


வெளிப்படுத்த மட்டுமல்லாது, தற்காப்புக் கலையாகவும் பயன்பட்டிருக்கின்றன. இக்கட்டான நேரங்களில் எப்படி அந்த இன்னல் சூழ்நிலையிலிருந்து விடுபடுவது என்பதும் கற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஒருவர் தனது மூச்சினை எவ்வளவு நேரம் உள்ளடக்கித் தம் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீரில் மூழ்கிக் கொண்டு பார்ப்பது ஒரு வகை நிகழ்ச்சியாக இருப்பது போல, நிலத்திலும் இந்த முறை இனிதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. ஒருவரின் உடல் திறனுக்கு ஏற்பவே, மூச்சை உள்ளடக்கும் சக்தியும் இருக்கும் என்ற நம்பிக்கையை முற்கால மக்கள் வளர்த்துக் கொண்டிருந்தனர்.

தம் பிடித்துக் கொண்டுப் பிறரைக் கடுமையாகத் தாக்க வேண்டும் என்ற முறைக்கேற்ப, அக்காலப் போர்முறைகள் மல்யுத்தம், குதிரையேற்றம், வேலெறிதல் முதலியவை அமைந்திருந்தன.

அதிக நேரம் மூச்சடக்கி ஆற்றலை வெளிப்படுத்துகின்ற வீரர்களே, அதிக பலத்தை உடைய சிப்பாய்களே, போரின் உயிர் நாடியாக அந்நாட்களில் விளங்கியதால், மூச்சடக்கிப் பயிற்சி பெறும் விளையாட்டினை முன்னோடிப் பயிற்சியாகக் கொண்டிருந்தார்கள் போலும்.

பாட்டும் பழக்கமும்

ஆரம்ப நாட்களில், மூச்சடக்கிக் கொண்டு பாடிப் போகும் வீரர்கள், எதாவது ஒரு பாட்டைப் பாடிப் போவார்கள். பாடத் தெரியாதவர்கள் சர் சர் என்றும், மேலும் பலர் குடுகுடு என்றும் பாடிப் போவது உண்டு.