பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சடுகுடு ஆட்டம்


கால் சட்டையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இடுப்பில் ‘பெல்ட்’ அணிவதோ, இரும்பு வில்லையுள்ள இடைவார்களோ, கையில் தங்கம், வெள்ளி மற்றும் உலோகத்தால் ஆன மோதிரங்கள், காப்புகள் எதுவும் அணிந்து கொள்ளக்கூடாது.

அத்துடன், விரலில் நகங்கள் கட்டாயமாக எப்பொழுதும்போல் குட்டையாக வெட்டப்பட்டிருக்க வேண்டும். கூர் நகங்கள் ஆட்ட நேரத்தில் அனுமதிக்கப் படக் கூடாது. எண்ணெய் அல்லது பிசுபிசுப்பான திரவம் எதுவும் உடலின் மேல் தடவியிருக்கவும் கூடாது என்பதை ஆட்டக்காரர்கள் உணர்ந்து, அவசியமாகக் கடைபிடித்து ஒழுக வேண்டியது மிக மிக முக்கியமாகும்.

4. விளையாடும் முறைகள்

1. நாணயம் சுண்டுவதில் வெற்றி பெறுகிற குழு, ஆடுகளத்தின் ஒரு பகுதி வேண்டும் அல்லது முதன் முதலில் பாடிச் செல்கின்ற வாய்ப்பு வேண்டும் என்ற ஏதாவது இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்ற உரிமையுடன் ஆட்டம் தொடங்குகிறது.

2. எதிர்க்குழுவின் ஆடுகளப் பகுதிக்குள்ளே பாடிச் செல்கின்ற ஆட்டக்காரர், பாடிச் செல்பவர் (Raider) என்று அழைக்கப்படுகிறார். அவரைப் பிடிக்க முயல்பவர்கள், பிடிப்பவர்கள் (Anti Raiders) என்றும் அழைக்கப் படுகிறார்கள்.

3. பாடிச் செல்பவர், மையக் கோட்டின்மீது வந்து நின்றவுடன் தெளிவாக, சத்தமாக, கபாடி கபாடி என்று தொடர்ந்து ஒரே மூச்சுடன் பாடித் தொடங்கியவாறு