டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
47
அரசருடன் தொடர்பு கொண்டவர்களால் மட்டுமே ஆடப்பெற்று வந்ததாக சரித்திரக் குறிப்புக்கள் கூறுகின்றன.
அரச பரம்பரையினர் மட்டுமே ஆடி மகிழ்ந்து வந்த காலம் மாறி, இன்று அறிவுள்ள, ஆழ்ந்து சிந்திக்க விரும்புகின்ற அனைவராலுமே, விரும்பி ஆடப்படுகின்ற ஆட்டமாக மாறி வந்திருக்கிறது.
ஆட்டம் தான் அரண்மனையிலிருந்து கீழிறங்கி வந்திருக்கிறதே தவிர, தரத்திலும் திறத்திலும் அதே சீரும் சிறப்புடன் தான் மிளிர்ந்திருக்கிறது.
“எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று பாரதி பாடினான். இன்று நாட்டு மக்களாகிய மன்னர்கள் நாயகர்களாக மாறி,நாளெல்லாம் மகிழ்ந்து விளையாடும் நாளாக மலர்ந்து வந்திருக்கிறது.
சதுரங்க ஆட்டத்தில் உள்ள ஆட்டக்காய்கள், அவற்றின் தன்மை என்ன, எவ்வாறு வைக்கப்படுகின்றன, நகர்த்தப்படுகின்றன. மோதிக் கொள்கின்றன என்பதனை முறையாக அறிந்து கொண்டால், ஆடுதற்கேற்ற ஆசை விரிவுறும் அறிவு வலிமை பெறும். வழியும் தெளிவு பெறும். விளையாடும் மனமும் நிறைவு பெறும். நிம்மதியும் தரும்.
இனி, ஆடப் பயன்படும் சாதனங்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்வோம்.