பக்கம்:சதுரங்கம் விளையாடுவது எப்படி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

சதுரங்கம் விளையாடுவது எப்படி?



ராஜா காய்க்கு அதிக சக்தி உண்டு. ஆட்டத்தின் நோக்கமே எதிரி ராஜா காயை பிடிப்பதென்பதுதான். ராஜா காய் பிடிபடப் போகிறது என்றவுடன், அந்த ஆட்டமே முடிவடைந்து விடுகிறது என்பதாலும், ராஜா காய்க்கு மதிப்புள்ள வெற்றி எண்களை ஆட்ட வல்லுநர்கள் குறிக்கவில்லை. அதன் மதிப்பு அளவிடற்கரியது என்றே குறித்துள்ளனர்.

மேலே குறிக்கப்பட்டுள்ள மதிப்பெண்களை வைத்துக் கொண்டு, அவற்றைப் பற்றிய ஒரு சில விளக்க முறையை கீழே காணலாம்.

ஒரு ஆட்டக்காரர் தனது ராணிக் காயை ஆட்டத்தில் தவறாகவோ அல்லது கவனமின்மை யாலோ இழந்து விடுகிறார் என்றால், ஆட்டத்தின் முக்கிய சக்தியை இழந்துவிட்டார் என்றே கூறலாம். அதேபோல் எதிராளியும் அந்த பிரதான சக்தியை இழந்துவிட்டிருக்கிறார் என்றால் சமாளிக்கலாம். இல்லையேல் தோல்வி நிச்சயம் என்ற அளவுக்கு, ராணிக் காயின் சக்தி கணிக்கப்பட்டிருக்கிறது.

ஆக, எதிரியின் ராஜா காயை முற்றுகையிட்டு வெற்றிப் பெற, (இறுதி ஆட்ட நேரங்களில்) தனியான ஒரு ராணிக் காய் அல்லது யானைக்காய், அல்லது இரண்டு ரதக் காய்கள் அல்லது ஒரு ரதக் காய், ராணிக்காய் ஒன்றும் மற்ற இரண்டு காய்களும் தேவைப்படும் என்பது ஒரு குறிப்பாகும்.