10சு. சமுத்திரம்
சத்தியத்துக்குக்
கலங்கிய கண்ணிமைக்குள் கிடந்த நீலக் கருமணிகள், அங்குமிங்கும் அரைவட்டமடித்தன. விழிகள், உதடுகள் போல் துடித்தன. செக்க சிவந்த மேனி உயரமாகிக்கொண்டிருந்தது. நெற்றி முனைகளில் படர்ந்த மோதிர நெளிவு முடி கற்றைகளை, அனிச்சையாய் தடவியபடியே, அவனையே நிதர்சனமாய் பார்த்தாள். பிறகு அவன் கழுத்தில் கரங்களை சங்கிலி வளையமாக்கியபடியே “பழையபடியும் முருங்கை மரத்தில் ஏறமாட்டீங்களே” என்றாள்.
அவன், அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே சொன்னான்.
“நான் வாறேன். நீ எனக்கு முன்கூட்டியே சொல்லாமல், இப்போ சொன்னதாலதான் என்னால நிலைப்படுத்த முடியல!”
“அரசியல் சதிக்கும், கொலை, கொள்ளைக்கும் தான் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்க வேணும். உண்மைக்கு எதுக்கு நோட்டீஸ்?”
“உண்மைக்கில்ல, உண்மையை நம்ப வைக்கிறதுக்கு. சூரியன் கூட, காலையில் சேவலை கூவவைத்துத்தான், படுக்கையில் இருந்து எழுந்திருக்கிறான்.”
“தப்பு! சூரியன் உதிக்கப் போறதாலதான், சேவல் கூவுது. சேவல் கூவுறதனால் சூரியன் உதிக்கல! என்னை நீங்க மனதார விரும்புறதாலதான், என்னோடு வீட்டுக்கு வாறீங்க. வீட்டுக்கு வாரதால விரும்பல!”
“ஒன்கிட்டே பேசி ஜெயிக்க முடியுமோ?”
“காதல் ஊடல்ல தோற்கிறவங்கதான் ஜெயிக்கிறதாய் அர்த்தமாம்! உம்... புறப்படுங்க.”