பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருக்கொண்ட எழுத்துக்கள்




கொழுத்தபலா செவ்வேரில் படுத்தி ருக்கும்
கொத்துமலர் கொண்டையிலே படுத்தி ருக்கும்
விழுப்புண்ணோ மார்மீது படுத்தி ருக்கும்
வில்லாற்றல் தோள்மீது படுத்தி ருக்கும்
செழித்தபுகழ்ப் பாவேந்தர் நெஞ்சக் கூட்டில்
சிங்கங்கள் படுத்திருக்கும்; அண்ணா வீட்டில்
எழுத்துக்கள் கருக்கொண்டு படுத்தி ருக்கும்;
எடுத்தெழுத மாட்டாரா எனத் துடிக்கும்.


சிந்துநடை எழுத்தாளர், பக்தித் தேனைச்
சிந்துநடை எழுத்தாளர், கம்ப னைப்போல்
சந்தநடை எழுத்தாளர், திருடு கின்ற
சந்துநடை எழுத்தாளர், மயங்க வைக்கும்
மந்த நடை எழுத்தாளர், சொல்லு ருட்டி
மருட்டுநடை எழுத்தாளர் இருக்கும் நாட்டில்
'சொந்த நடை எழுத்தாளர் இவரே' என்று
சொல்லுகின்றார் கற்றறிந்த மேதை யெல்லாம்!