பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

முருகுசுந்தரம்



தாயிருக்கும் பக்கத்தைத்
தாவுகின்ற கைக்குழந்தை
பார்ப்ப தைப்போல்
வாய்விசித்த தாமரைப்பூ
வானத்துச் செங்கதிரைப்
பார்ப்ப தைப்போல்
பாய்விரித்த பெரும்புலமைப்
பகுத்தறிவுப் பெருங்கலமே!
பதைப்பு டன்நீ
போயிருக்கும் பக்கத்தைப்
போர்த்தமிழர் எல்லாரும்
பார்க்கின் றார்கள்!


வானத்தைக் காணுகையில்
வாய்த்தவுன்றன் பெரும்புலமை
காணு கின்றோம்;
மீனினத்தைக் காணுகையில்
மேன்மைபெற்ற உன்படைப்பைக்
காணு கின்றோம்;
வானவில்லைக் காணுகையில்
வடித்தவுன்றன் எழுத்துவண்ணம்
காணு கின்றோம்:
கூன் பிறையில் உன் கலையைக்
கோடைமழை யில்பேச்சைக்
காணு கின்றோம்.