பக்கம்:சமணமும் தமிழும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணசமயம் தோன்றிய வரலாறு

5


இயல்பு. தம்முடைய மதப்பெரியார்களின் பெருமை, ஆற்றல், சிறப்பு, தெய்விகத் தன்மை முதலியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்னும் சமய ஆர்வத்தினால் ஒவ்வொரு சமயத்தாரும் த‍த்தம் சமயப் பெரியாரைப் பற்றிப் பலவித செய்திகளைக் கற்பித்து விடுகிறார்கள். இயற்கைக்கு மாறுபட்ட இக்கற்பனைகளைச் 'சமயப்பற்று' என ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர்கள் உண்மையில் உலகத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது புலனாகும். அதுபோன்று தீர்த்தங்கர‍ரின் மிகப் பெரிய உருவத்தையும் நீண்ட வாழ்க்கையையும் சமணரின் 'சமயக் கொள்கை' என்று ஒதுக்கிவிடுவோமாயின், தீர்த்தங்க‍ர‍ர் அனைவரும் உண்மைப் பெரியார் என்பது புலப்படும்.

சமணர்கள் தமது தீர்த்தங்கரருக்கு ஏன் பருத்த உயர்ந்த உடலையும் நீண்ட ஆயுளையும் கற்பித்தார்கள்?

உயிர் உடம்பு முழுவதும் பரவி நிற்கிறது என்பதும், உடம்பின் உருவத்திற்கு ஏற்றபடி உயிரானது சிறிதும் பெரிதுமாக அமையும் என்பதும் சமண சமயக்கொள்கை. எறும்பின் மிகச்சிறிய உடலில் பரந்துநிற்கும் உயிர் அதன் உடலுக்குத் தக்கபடி சிறியதாகவும், மிகப் பெரிய யானையின் உடம்பில் பரந்து நிற்கும் உயிர் அதன் பெரிய உடம்புக்குத் தக்கபடி மிகப் பெரியதாகவும் அமைந்து நிற்கும் என்பது ஆருகதமதக் கொள்கை. இக்கருத்துப் பற்றியே “பெரியதன் ஆவிபெரிது” என்னும் பழமொழியும் சமணரால் வழங்கப்படுவதாயிற்று, என்னை?

அரிதவித் தாசின் றுணர்ந்தவன் பாதம்
விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்
துரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
பெரியதன் ஆவி பெரிது

என்பது பழமொழி நானூறு.

இச்சமயக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆருகதர் தமது தீர்த்தங்கரருக்கு மிகப்பெரிய உருவத்