பக்கம்:சமணமும் தமிழும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

சமணமும் தமிழும்


மேன்மேலும் நீர் பெருகாமல் தடைப்படுவது போன்று, மனம் வாக்கு காயம் ஐம்புலன் முதலியவற்றை அடக்கி உயிரினிடத்தில் மேன்மேலும் இருவினைகள் சுரவாதபடி தடுத்தலே செறிப்பு ஆகும்.

7. உதிர்ப்பு (நிர்ஜரை): இருவினை ஊற்று உயிரினிடத்து மேன் மேலும் பெருகாதபடி தடுத்த பின்னர், அனுபவித்துக் கழிக்காமல் எஞ்சி நின்ற வினைகளைக் களைந்து விடுவதற்கு உதிர்ப்பு அல்லது நிர்ஜரை என்பது பெயர். இதனைத் துவாதச தபம், குப்தி, சமிதி, தருமத்தியானம் சுக்கிலத்தியானம் முதலியவற்றால் செய்யவேண்டும்.

“வரும் பாவம் எதிர் காத்து மன்னுந்தம் பழவினையும்
ஒருங்காக உதிர்த்தக்கால் உயிர்த்தூய்மை வீடென்றாள்.”
                                         (நீலகேசி, மொக்கல 312.)

இதன் பொருள், “வருகின்ற கர்மங்களைக் குப்தி, சமிதி முதலாயினவற்றால் அடைத்து தபஸ் ஸம்ப மாதிகளால் நின்ற கர்மங்களை நிர்ஜரிப்பித்தல் (உதிர்த்தல்) ஆத்மாவின் சண் மல நீக்கத்தால் பிறக்கின்ற சுத்தியே வீடாவ தென்று சொல்லுவது" (சமயதிவாகர வாமன முனிவர் உரை.)

8. கட்டு (பந்தம்): மனம், வாக்கு, காயம், ஐம்புலன் முதலியவற்றால் உண்டான வினைகள் உயிருடன் ஒன்றிக் கலப்பது கட்டு அல்லது பந்தம் எனப்படும். பழுக்கக் காய்ந்த இரும்பில் நீரைத் தெளித்தால், அவ்விரும்பு நீரை இழுத்துக் கொள்வது போலவும், பாலுடன் நீரைக் கலந்தால் இரண்டும் ஒன்றுபடுவது போலவும் வினைகள் உயிருடன் கலக்கின்றன. எண்ணெய் தோய்ந்த துணியில் அழுக்கு எளிதில் பற்றிக் கொள்வதை இதற்கு உதாரணமாகக் கூறுவதுண்டு, உயிரைத் துணியாகவும், ஐம்புலன் வாக்கு காயம் முதலியவற்றை எண்ணெயாகவும் வினைகளை அழுக்காகவும் உபமான உபமேயப்படுத்திக் கூறுவர்.

9. வீடு (மோக்ஷம்): ஐந்தவித்து வினைகளினின்றும் நீங்கிய உயிர் கேவல ஞானம், கேவல தரிசனம், கேவல