பக்கம்:சமணமும் தமிழும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௫. சமணசமயம் தமிழ்நாடு வந்த வரலாறு


சமணர்களின் கடைசி தீர்த்தங்கரராகிய வர்த்தமான மகாவீரர் தமது 72--ஆவது வயதிலே கி. மு. 527-இல் மோட்சம் அடைந்தார் .மகாவீரரின் சீடர்களில் ஒன்பதின்மர், கேவல ஞானம் வாய்க்கப்பெற்று மகாவீரர் காலத்திலேயே இராசக்கிருக நகரில் வடக்கிருத்தல் என்னும் சல்லேகனை நோன்பிருந்து வீடுபேறடைந்தனர்.[1] கௌதம இந்திரபூதி, சுதர்மர் என்னும் இரண்டு கணாதரர்கள், மகாவீரர் வீடுபேறடைந்த பின்னரும் உயிர் வாழ்ந்திருந்தார்கள்.

மகாவீரர் விடுபேறடையும் வரையில் தாமே சமண சமயத் தலைவராக இருந்தார். அவருக்குப் பின்னர், அவர் சீடர் கௌதம இந்திரபூதி என்பவர் சமயத் தலைாக இருந்தார். அவருக்குப் பிறகு, மகாவீரரின் மற்றொரு சீடராகிய சுதர்மர் என்பவர் சமய குரவராக இருந்தார். அவருக்குப் பின்னர் அவரின் (சுதர்மரது) சீடராகிய சம்புசுவாமி சமய குரவராக இருந்தார். அவருக்குப் பிறகு விட்ணுநந்தி என்னும் விட்ணுதேவர் சமயத் தலைவர் ஆனார். அவருக்குப் பிறகு ந‍ந்திமித்திரரும், அவருக்கும் பின்னர் அபராசிதரும், அவருக்குப் பிறகு கோவர்த்தனரும் அவருக்குப் பின்னர் பத்திரபாகு முனிவரும் சமய குரவராக இருந்தனர். பத்திர பாகு முனிவர் காலத்திலேதான் சமணசமயம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்பர். பத்திரபாகு முனிவர் கி. மு. 317 முதல் கி. மு. 297 வரையில் சமணசமயத் தலைவராக இருந்தவர், இவர், சமணசமயத் தலைவராக இருந்ததோடல்லாமல், பேர்பெற்ற சந்திரகுப்தன் (கி. மு. 322-298) என்னும் மௌரிய அரசனுக்கு மதகுருவாகவும் இருந்தார். இந்தச் சந்திரகுப்த மௌரியன் கிரேக்க அரசனாகிய மகா அலெக்சாந்தர் காலத்தவன்; இந்தியாவை அரசாண்ட சக்கரவர்த்தி; அசோக சக்கரவர்த்தியின் பாட்டன்.[2]


  1. சல்லேகனை என்னும் தொடர்புரை காண்க.
  2. மௌரியர் அல்லது மோரியர் தமிழ் நாட்டின்மீது படையெடுத்து வந்தனர் என்று சங்க நூல்களில் கூறப்படுகிற நிகழ்ச்சி இச் சந்திர குப்த அரசன் காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர்களில் சிலர் கருதுகின்றனர்.